கல்வித் தரத்தின் நிலை இதுதானா?

தேசிய அளவில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட வற்றை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணியை, தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகார கவுன்சில் – “நாக்” செய்து வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு – யு.ஜி.சி., யின் கீழ் செயல்படும் இந்த கவுன்சில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், விண்ணப்பித்தால், தங்கள் குழுவினரை அனுப்பி ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில், கல்வி நிறுவனத்திற்கு, “ஏ, பி” என, “கிரேடு” வழங்கப்படும். இந்த அங்கீகாரம் பெற்றால், கல்லூரிகள், பல்கலைக்கழங்களில், மாணவர்கள் சேர்க்கையும்; நிதி அதிகரிக்கும். எனவே அங்கீகாரம் பெற, அனைத்து கல்வி நிறுவனங்களும் முனைப்பு காட்டும்.
அந்த வகையில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளின் தரத்தை, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ‘நாக்’ குழு ஆய்வு செய்கிறது. இதில், அங்கீகாரம் தொடருவது மற்றும் புதிய அங்கீகாரம் வழங்குவது ஆகியன குறித்து, ஆய்வு செய்யப்படுகிறது.’ஏ, பி, சி’ என, மூன்று நிலைகளில், கல்லூரிகள் தரம் பிரிக்கப்படுகின்றன. 3 முதல், 4 புள்ளி பெற்ற கல்லூரிகளுக்கு, ‘ஏ’ அந்தஸ்தும்; 2 முதல், 3 புள்ளிகள் பெற்ற கல்லூரிகளுக்கு, ‘பி’ அந்தஸ்தும்; 1 முதல், 2 புள்ளிகள் பெற்ற கல்லூரிகளுக்கு, ‘சி’ அந்தஸ்தும் வழங்கப்படுகின்றன.
0.1 புள்ளிகள் பெறும் கல்லூரிகளின் அங்கீகாரம், ரத்து செய்யப்படுகிறது. கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகள், நிர்வாகம், வேலைவாய்ப்பு, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், சமூக சேவை உள்ளிட்ட இதர செயல்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள் விகிதாசாரம் உள்ளிட்ட விதிகளை, அடிப்படையாக கொண்டு நாக்’ குழு ஆய்வு நடத்துகிறது. அதாவது நாட்டிலிருக்கும் கல்லூரிகளுக்கு விஜயம் செய்து, அவற்றின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து A, A+, AAA+ என்கிற தரச் சான்றிதழ்களை வழங்கும் அமைப்புக்குப் பெயர்தான் National Assessment and Accreditation Council (NAAC). மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுவது.இந்த அமைப்பின் குழு ஒன்றுதான் இந்தத் தரவரிசைப் படுத்தும் வேலையைச் செய்கிறது. அது வழங்கும் மதிப்பின் அடிப்படையில்தான் கல்லூரிகளுக்கு அரசின் நிதி வழங்கப் படுகிறது.
நிற்க, மத்திய புலனாய்வுக் கழகம் (CBI) இந்தக் குழுவின் தலைவர், உறுப்பினர்கள், கல்லூரி நிர்வாகிகள் உட்பட 10 பேரைக் கைது செய்திருக்கிறது. கல்லூரிகளுக்கு அதிக rating வழங்குவதற்காக இவர்கள் “அன்பளிப்புகளைப்” பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு. இவர்களிடமிருந்து இதுவரை ரூபாய் 37 லட்சம் ரொக்கம், 6 Lenovo மடிக்கண்ணிகள், ஒரு IPhone, 6 Pro mobile, ஒரு தங்க நாணயம், ஆறு american tourister trolley bags ஆகியவை கைப்பற்றப் பட்டிருக்கின்றன. கல்வித் தரத்தின் விலை இவ்வளவுதானா என்று கேட்க வேண்டாம். இது ஒரு tip of the icebergதான் எனத் தோன்றுகிறது.