அப்பாலே போ சாத்தானே!

அப்பாலே போ சாத்தானே!

தொடர்ந்து கைபேசித் திரையை ஸ்க்ரோல் செய்வது நம் சிந்திக்கும் திறனை எப்படி சிதைக்கிறது என்பதை விளக்கி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதன் சில துளிகள்:

1. டிஜிட்டல் ஊடகம் நீங்கள் எதனை விரும்புகிறீர்களோ அதனைத் தொடர்ந்து உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பொருளில் தொடர் கவனம் செலுத்தாமல், ஆழமாக சிந்திக்காமல் இருக்கச் செய்கிறது.

2. இதனால் நீண்ட ஒரு செய்தித்தாள் கட்டுரையை அல்லது ஆவணத்தைக் கிரகிக்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

3. அது மட்டுமல்லாமல் நம் சிந்தனை வறண்டு போய் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, எதையும் முறையாகக் கற்றுக் கொள்வது போன்றவற்றிற்குத் தேவையான சக்தி இல்லாதவர்களாய் உணர்கிறோம்.

4. மூளைக்குள் ஏராளமான தகவல்கள் தொடர்ந்து செல்வதால் உடனடியாகத் தேவைப் படும் தகவலை மட்டுமே அது பதிவு செய்கிறது. ஸ்க்ரோல் செய்து கொண்டே இருப்பதால், தகவல்களைப் பகுத்தாய்ந்து உள்வாங்கும் திறன் குறைந்து அன்றாட வேலைகளைச் செய்யத் தேவையான சக்தி குறைந்து விடுகிறது.

5. சமூக வலைத்தளங்களிலிருந்து கிடைக்கும் பெரும்பாலான தகவல்கள் நீண்டகால நினைவுப் பெட்டகத்தில் சேமித்து வைக்கத் தகுதியவற்றவை. இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா?

இருக்கிறது.

1. உங்கள் தகவல் மற்றும் கேளிக்கைத் தேவைகளுக்கான ஆதாரங்களை (sources) பலதரப்பட்டைவையாக மாற்றுங்கள். நீண்ட மற்றும் குறுகிய உள்ளடக்கம் கொண்ட போட்காஸ்ட், செய்தித்தாள் ஆகியவற்றை உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுங்கள். அவசர உள்ளடக்கத்தினைத் (fast content) தவிர்த்தாலே 10 நாட்களில் உங்கள் மூளையின் நச்சுத்தன்மை (toxicity) குறைந்துவிடும். இந்தக் காலகட்டத்தில் கைபேசியை முடிந்தவரை தள்ளிவைக்க வேண்டும்.

2. மூளையிலிருக்கும் டோபாமைனின் அளவு குறைந்தாக் உடனடியாக திருப்தி தேடும் ஆவல் குறையும். மெதுவாக, நிதானமாக வேலை செய்யும் விதமாக உங்கள் மூளையை பழக்கப் படுத்தவும் – அச்சுப் பிரதிகளை படிப்பது, எழுதுவது, குறிப்பு எடுத்துக் கொள்வது போன்ற செயல்கள்.

இதிலிருந்து தெரிய வருவது:

அதாவது, அப்பாலே போ சாத்தானே என்று கைபேசியை இயன்ற வரை தள்ளி வையுங்கள்.

இந்தப் பதிவே நீளமானது, அயற்ச்சி தருகிறது என்று நீங்கள் நினைத்தால் மனநல மருத்துவரை அணுகவும். 😊

விஜய்சங்கர் ராமசந்திரன்

error: Content is protected !!