’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ – விமர்சனம்!

அண்மைகாலமாக நம் நாயகர்கள் பலரும் கத்தி, கடப்பாறை, துப்பாக்கி போன்ற இரும்பு சாமான்களோடுதான் சண்டையில் இறங்குகிறார்கள். ஆக உடல்கள் சிதைவது முகங்கள் கிழிவது ரத்தப் பெருக்கு எல்லாவற்றையும் எந்த எதிர்வினையும் இல்லாமல் பக்கெட் நிறைய பாப்கார்னை சாப்பிட்டுக்கொண்டே குழந்தைகள் ஆண்கள் பெண்கள் அனைவரும் ரசிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள். காட்சிரீதியான வன்முறையின் அபாயகரமான விளைவு இதுதான். வன்முறை வெறுக்கத் தக்கது. அச்சத்தையும் அருவருப்பையும் உண்டாக்கும் என்பது போய், வன்முறை ஒரு கேளிக்கையாக மாறியுள்ளது. இது மனித மனங்களின் சுரணையை மழுங்கச் செய்துவிடுகிறது. எல்லோரும் சினிமா, கலை என்ற பெயரில் இவர்கள் ஆபாசத்தையும், வன்முறையையும் விற்பனைச் சரக்குகளாக்குகிறார்கள். வன்முறையை ருசிகரமான பண்டமாக மாற்றுகிறார்கள். ஆழ் மனங்களில் புரையோடிப் போயிருக்கும் போலியான கலைஞர்கள் தான் இது போன்ற சினிமாக்களை எடுப்பார்கள். இன்னும் அடுத்தடுத்து இது போன்ற சினிமாக்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றன. சென்சார் போர்டு சில சமயங்களில் இது போன்ற சினிமாக்களுக்கு யு சான்றிதழ் அளிக்கிறது என்பது வேதனையான செய்தி. இச்சூழலில்தான் டோலிவுட்டிலுல் உருவாகி கோலிவுட்டுக்கு பக்கெட் பக்கெட்டாக ரத்தத்துடன் வந்திருக்கிறது ஷைலேஷ் கோலனு டைரக்ஷனில் வெளிவந்துள்ள ஹிட்: தி தேர்ட் கேஸ் திரைப்படம். கமர்சியல் ஹிட் கேஸ் வரிசையில் மூன்றாவது படம். அடுத்து நான்காவது கேஸூம் கண்டிப்பாக வருமாம். லவ்லியான சினிமாக்கள் மூலம் பலரின் மனம் கவர்ந்த நானிக்கு படு கொடூரமான கேரக்டர் . முதல் காட்சியிலேயே ரத்தம் தெறிக்கத் தொடங்குகிறது. மரத்தில் ஒருவரை தலைகீழாக தொங்கவிட்டடு கறகறவென கத்தியால் கழுத்தை அறுக்கும் காட்சிகள் அடிக்கடி வருகின்றன. ஆனாலும் அதை ரசிக்க வைக்கும் வித்தையில் பாஸாகி விடுவதுதான் சோகம்.
அதாவது இப்போது ஹாட் டாபிக்கில் இருக்கும் ஜம்மு காஷ்மீரில் புலனாய்வு போலீஸ் எஸ் பி ஆக இருக்கும் நானி அங்கு நடக்கும் மர்மமான கொலைகளை கண்டுபிடிக்கும் கேசை கையில் எடுக்கிறார். காஷ்மீரில் அடுத்தடுத்து யாரோ ஒருவர் தலைகீழாக தொங்கப்பட்டு அவரது கழுத்து தலை என சில பாகங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கின்றனர். அத்துடன் இதே டைப்பில் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதே போன்ற கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்த கொலைகளை செய்யும் சைக்கோ கொலைகாரர்கள் ஏன் இப்படிப்பட்ட கொலைகளை தொடர்ந்து ஒரே டெம்ப்ளேட்டில் செய்கின்றனர் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பி போகும் போலீஸ் அதிகாரி நானி அதனை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு வன்முறைகளில் ஈடுபடுகிறார். அவரது எல்லை மீறல்களால் அவர் விசாகப்பட்டினத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். அங்கே போன இடத்திலும் இரண்டு ஆசாமிகளை தலைகீழாக தொங்கவிட்டு அதேபோன்ற ஒரு கொலையை செய்து அதை தன் கேமராவில் படம் பிடித்து வைத்துக் கொள்கிறார். ஏன் இவர் இப்படி செய்ய வேண்டும்? கொடூரமான கொலைகளுக்கான பின்னணியில் இருப்பது யார்? ஒரே பேட்டர்னில் தொடர் கொலைகள் நடப்பதற்கு என்ன காரணம்? நானியும் இப்படி குரூரமாக நடந்து கொள்வதன் காரணமென்ன என்ற கேள்விகளுக்கெல்லம் பதில் சொல்வதே இந்த ஹிட் – தி தேர்டு கேஸ் படக் கதை.
முரட்டுத்தனமான சிந்தனையும் வன்முறை பாணியை மட்டும் கையாளும் போலீஸாக வரும் நானி படம் முழுக்க சிரிக்காமல் வருகிறார். அடிக்கிறார், சுடுகிறார், கொல்கிறார்.. ரிப்பீட்டு . ஆம் முழுக்க அடிதடி வெட்டு குத்து என பார்ப்பவர்களை எல்லாம் கண்டமேனிக்கு போட்டு தள்ளும் போலீஸ் அதிகாரியாக வரும் அவர் காட்சிக்கு காட்சி மூளைக்கும் வேலை கொடுத்து அதே சமயம் ஆக்சன் காட்சிகளும் ரத்தம் சொட்ட சொட்ட கொடுத்து பார்ப்பவர்களுக்கு சிலிர்ப்பை கொடுத்து ரசிக்க வைப்பதில் தேறி இருக்கிறார். கூடவே காதல் காட்சிகளிலும் சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து அட சொல்ல வைத்து விடுகிறார். நாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அவர் சிறிது நேரம் தோன்றி, ஒரு திருப்பத்தை அளித்தாலும் அதுவும் பெரியதாக எடுபடவில்லை. ராவ் ரமேஷும், சமுத்திரக்கனியும் இரண்டு காட்சிகளில் மட்டுமே வருகின்றனர், நானி மட்டுமே முழு படத்தையும் தனது தோளில் சுமக்கிறார்.
கேமராமேன் சானு ஜான் வர்கீஸ் படத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகளும் படத்தில் அதிகமாக இருந்தாலும், அதை உறுத்தாத வகையில் காட்சிப்படுத்த முயன்றிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. மியூசில் டைர்க்டர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் எகிறச் செய்ய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது,
முதல் இரண்டு படங்களில், கதாநாயகன் கொலை செய்வதற்கான நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்தாலும் ஹிட் 3 திடைப்படத்தில் கொலைவெறியே பிரதானமாகத் தெரிகிறது. அத்துடன் இப் படத்தில் வலுவான வில்லன் இல்லாதது ஒரு குறை. அந்தக் கதாபாத்திரம் மனதில் பதிவாகவில்லை, அதனால்தான் ஹீரோ சிந்தும் ரத்தம் ஒட்டவ்ஃபில்லை. மொத்தத்தில் ஆரம்ப பேராவில் சொன்னது போல் படத்தில் வன்முறை, வன்முறை, வன்முறை மட்டுமே நிறைந்த காட்சிகள் இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்க முடியுமா என்ற கேள்வி மட்டும் ஒரு பக்கம் எழுகிறது. அது சற்றே படத்திற்கு மைனஸ் ஆக அமைந்தாலும் படம் எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல்விறுவிறுப்பாக நகர்ந்து நல்ல திரில்லர் படம் பார்த்த உணர்வை கொடுத்து விடுகிறது இந்த ஹிட் – தி தேர்ட் கேஸ் . ஆனால்
இபப்டியான முகம் சுளிக்க வைக்க ரத்த களேறிகள் நிறைந்த படங்களுக்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கொடுத்துவிட்டு போய் விடுகிறது. ஆனால், இதைக் காணும் ரசிகர்கள் அது இளையவர்ோ, முதியவர்களோ – அவர்கள் மனதில் இந்த வயலன்ஸ் ஒரு நச்சுக் கிருமியாக நுழைந்து விருட்சமாக வளர்ந்து விடும் ஆபத்தை காலம் மட்டுமே உணர்த்தும்.
மார்க் 2.25/5