ஹாமில்டன் நாகி, படிக்காமலே மருத்துவர் ஆன தென்னாப்பிரிக்கர்!

ஹாமில்டன் நாகி, படிக்காமலே மருத்துவர் ஆன தென்னாப்பிரிக்கர்!

ஹாமில்டன் நாகி (Hamilton Naki) = கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிகாவின் வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரான கிறிஸ்டியான் பெர்னார்ட் என்பவரது மருத்துவ உதவியாளர். முறையான மருத்துவமோ உயர்நிலைக்கல்வியோ கூட படிக்காத நிலையில் தனது அறுவை சிகிச்சைத் திறமை மூலம் மட்டுமே மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பாடம் கற்பித்தவர்; உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் விலங்குகள் குறித்த ஆய்வுகளில் குறிப்பிட்ட பங்காற்றியவர்.

இளமை

1926 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஹாக்-கேன்(Ngcingane) என்ற பகுதியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் ஹாமில்டன் நாகி. தொடக்கப்பள்ளி கல்வியை மட்டுமே முடித்த ஹாமில்டனை அதற்குமேல் அவரது குடும்பத்தால் படிக்க வைக்க முடியவில்லை. எனவே தனது 14 ஆவது வயதில் வேலை தேடி கேப்டான் நகருக்கு வந்தார். கேப்டான் பல்கலைக்கழகம் ஹாமில்டனை தோட்ட ஊழியராக பணியில் சேர்த்துக்கொண்டது. அடுத்த பத்து ஆண்டுகள் அந்த பல்கலைகழகத்தின் தோட்ட வேலைகளையும் டென்னிஸ் மைதானத்தையும் பராமரித்து வந்தார்.

மருத்துவப் பணிகள்

துப்புரவு வேலை செய்தாலும் எப்போதுமே தூய்மையாக இருப்பார் ஹாமில்டன். 1954ல் தோட்ட வேலையையும் பார்த்துக்கொண்டு பல்கலைகழகத்தின் மருத்துவ ஆய்வு கூடத்தில் உதவுமாறு ஹாமில்டனைக் கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ் என்ற மருத்துவதுறைத் தலைவர். ஹாமில்டனும் அதற்கு இணங்கி அங்கு ஆய்வுக்காக வைக்கப்படிருந்த விலங்குகளை பராமரித்து வந்தார். ஒருமுறை ஓர் ஒட்டகசிவிங்கியை அறுத்து பரிசோதிக்கும்போது தனக்கு உதவுமாறு ஹாமில்டனை கேட்டுக்கொண்டார் ராபர்ட் கோட்ஸ். அப்போது ஹாமில்டனின் செயல்பாடுகளைக் கவனித்து வியந்த கோட்ஸ் தனது உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். அந்த ஆய்வுகூடத்தில் எல்லாவிதமான விலங்கினங்களையும் அறுத்து மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு ராபர்ட் கோட்ஸ் சென்ற பிறகு கிறிஸ்டியான் பெர்னார்ட் என்பவருக்கு ஆய்வக உதவியாளராகப் பணி புரிந்தார். பெர்னார்டு அமெரிக்காவில் இதய அறுவை சிகிச்சை குறித்த கல்வி கற்றவர். அதன் தொழில் நுட்பங்களைத் தென்னாப்பிரிக்காவிற்குக் கொணர்ந்தவர்.

தொடக்கப்பள்ளியோடு கல்வியை முடித்துக்கொண்ட ஹாமில்டன் அந்த பரிசோதனைக்கூடத்தில் கண்களால் பார்த்தே பலவற்றைக் கற்றுக்கொண்டார். விலங்கின் உறுப்புகளை லாவகமாக அறுத்து எடுப்பதில் ஹமில்டன் தனித்திறமை காட்டினார். வெகுவிரைவில் மருத்துவதுறை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் அளவுக்கு ஹமில்டன் சிறந்து விளங்கினார். அடுத்த நாற்பது ஆண்டுகளில் சுமார் 5000 மருத்துவ மாணவர்களுக்கு அவர் பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் பின்னாளில் மருத்துவதுறையில் சிறந்த நிபுணர்களாக உயர்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ந்தேதி தென்னாப்பிரிக்காவின் கேப்டான் நகரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இதய மற்று அறுவை சிகிச்சையில் பெயரும் புகழும் கிறிஸ்டியான் பெர்னாட்க்குப் போக, அதில் ஹாமில்டனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது; மறுக்கப்பட்டது. உண்மையில் நீ ஒரு வெள்ளை இனத்தவரின் உடலை அறுக்கிறாய் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்ட பின்னரே ஹமில்டனை அந்த அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தது அந்த மருத்துவமனை நிர்வாகம். உலக பத்திரிக்கைகளின் பக்கங்களில் அந்த அறுவை சிகிச்சை சம்பந்தபட்ட படங்கள் பிரசுரமாயின. அதில் சில படங்களில் டாக்டர் பெர்னாடின் பின்புறம் புன்னகையோடு நின்றிருந்தார் ஹாமில்டன். அவர் யார் என்று எழுந்த கேள்விகளுக்குத் துப்புரவு ஊழியர் என்றும், பூங்கா காவலர் என்றும் பதில் கூறிச் சமாளித்தது மருத்துவமனை நிர்வாகம். கறுப்பர்- வெள்ளையர் இனவெறி இருந்த காலத்தில் இச்செய்தி இவர் இறந்த பிறகே வெளிஉலகிற்குத் தெரியவந்து பெரும் விவாதங்களுக்குட்பட்டது. இந்த சம்பவம் நடந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் இறப்பதற்கு முன்புதான் ஹாமில்டன் பற்றிய உண்மைகள் வெளியாகத் தொடங்கின. தன் மரணத்திற்கு முன் ஹாமில்டன் என்னைவிட சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்று மனம் திறந்து புகழ்ந்தார் கிறிஸ்டியான் பெர்னாட்.

ஓய்வும் வாழ்வும்

ஆனால் அந்த நாற்பது ஆண்டுகளில் ஹாமில்டனுக்கு ஒரு மருத்துவருக்கான ஊதியமோ, மரியாதையோ, கவுரமோ வழங்கப்படவில்லை. பல்கலைகழக பதிவேட்டில் ஹாமில்டன் ஒரு துப்புரவு ஊழியர் என்றே குறிக்கப்பட்டிருந்தது. 1991 ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருக்கு கிடைத்த மாதாந்திர ஓய்வூதியம் 760 ராண்ட் அதாவது 275 அமெரிக்க டாலர்தான்.  பட்டயப் படிப்பு கூட படிக்காத ஒருவருக்கு அவ்வளவுதான் ஊதியம் கொடுக்க முடியும் என்றது பல்கலைக்கழக நிர்வாகம். பல அறுவை சிகிச்சை வல்லுநர்களை உருவாக்கிய ஹாமில்டனால் தனது ஐந்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியவில்லை ஒரு பிள்ளையை மட்டும் உயர்நிலைப்பள்ளி கல்விவரை படிக்க வைத்தார். மிகவும் எளிய வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர் ஹாமில்டன்.

வரலாற்று சிறப்பு வாய்ந்த உலகின் முதல் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அன்றைய தினம்கூட டாக்டர் கிறிஸ்டியான் பெர்னாட் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்க ஹாமில்டன் அங்கிருந்து கிளம்பி தனது ஓரறை வீட்டிற்குதான் சென்றார். அந்த வீட்டில் அடிப்படை வசதியோ மின்சார வசதியோ கிடையாது. கிடைத்த சொற்ப சம்பளத்தில் பெரும்பகுதியைத் தனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அனுப்பிவிட்டு எந்த வசதியுமின்றி எளிமையாக வாழ்ந்தார் ஹாமில்டன். கடவுள் பக்திகொண்ட அவர் பல்கலைகழகத்தில் இருந்த நாட்களில் மதிய உணவு நேரத்தில் பக்கத்திலிருந்த இடுகாட்டில் கூடும் வீடு அற்றவர்களுக்கு விவிலியத்தை வாசித்துக்காட்டுவதிலும், மது மற்றும் போதைப் பொருட்களைப்பற்றி எச்சரிப்பதிலும் செலவிட்டார். ஓய்வுபெற்ற பிறகு சொற்ப சொத்தே இருந்தபோதும் ஹாமில்டன் பழைய பஸ் ஒன்றை நடமாடும் மருந்தகமாக மாற்றி தான் பிறந்த ஊருக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்தித் தந்தாராக்கும்

தனுஜா