மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சிலிருந்து காக்குமா? இன்னா ஆதாரம்? -விஞ்ஞானிகள் கேள்வி!
![மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சிலிருந்து காக்குமா? இன்னா ஆதாரம்? -விஞ்ஞானிகள் கேள்வி!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2020/10/chip-oct-19a.jpg)
மாட்டுச்சாண சிப் செல்போன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்டு 600 விஞ்ஞானிகள் ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மோடி தலைமையிலான மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் அமைப்பு பசுக்களைப் பேணுதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக வல்லபாய் கத்திரியா (Vallabhbhai Kathiria) உள்ளார். தீபாவளியை முன்னிட்டு இந்த அமைப்பு பசு மாட்டுச் சாணத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் `காம்தேனு தீபாவளி அபியான்’ என்ற நாடு தழுவிய பிரச்சார நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி உள்ளது.
இதன் தொடக்க விழாவில் அந்த அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை வெளியிட்டு, இந்த சிப் செல்போன்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் குறைக்கும் என்றும், நோய்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பை செல்போன்களில் பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். மாட்டுச்சாணத்தால் ஆன இந்த சிப்புக்கு `கவ்சத்வ கவாச்’ (Gausatva Kavach) என்று பெயரிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
#WATCH: Cow dung will protect everyone, it is anti-radiation… It's scientifically proven…This is a radiation chip that can be used in mobile phones to reduce radiation. It'll be safeguard against diseases: Rashtriya Kamdhenu Aayog Chairman Vallabhbhai Kathiria (12.10.2020) pic.twitter.com/bgr9WZPUxK
— ANI (@ANI) October 13, 2020
இந்நிலையில் மாட்டுச்சாண சிப் செல்போன் கதிர்வீச்சிலிருந்து காக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது எனக் கேட்டு 600 விஞ்ஞானிகள் ராஷ்டிரிய காம்தேனு ஆயோக் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஆம்.. 600-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான கல்வியாளர்கள் கூட்டாக ராஷ்டிரிய காம்தேனு ஆயோக்கின் தலைவரான வல்லபாய் கதிரியாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சு எதிர்ப்பு திறன் கொண்டது என்பது குறித்து எத்தனை பேரிடம், எங்கு, எப்போது பரிசோதனை நடத்தப்பட்டது என ஆதாரம் கேட்டுள்ளனர். மேலும் இந்த சிப்பை உருவாக்கிய முதன்மை புலனாய்வாளர்கள் போன்ற விவரங்களையும் கேட்டுள்ளனர். கண்டுபிடிப்புகள் எங்கு வெளியிடப்பட்டன? தரவு மற்றும் சோதனை விவரங்களை வழங்க முடியுமா என்றும் கடிதத்தில் விஞ்ஞானிகள் கேட்டுள்ளனர்.