எஸ் பேங்க்-கில் போட்ட டெபாசிட் பணம் எங்ககிட்டே சேஃப்ஃபா இருக்குது – நிதி அமைச்சர் தகவல்!
எஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது. அவர்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி கவர்னர், என்னிடம் உறுதி அளித்துள்ளார். ரிசர்வ் வங்கியுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். – என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் வங்கியான யெஸ் வங்கியின் நிர்வாகத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தன்வசம் எடுத்துக்கொண்டு, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் குமாரை யெஸ் வங்கி நிர்வாகியாக அறிவித்தது. யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க ஏ.டி.எம்களுக்கு விரைந்தனர். பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுத்து சென்றனர். பல மையங்களில் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் தீர்ந்துவிட்டதாலும் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் வாடிக்கை யாளர்கள் பலர் பணம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதே சமயம் இந்த யெஸ் வங்கிக்கு 30 நாட்கள் தவணை கொடுக்கப்பட்டது குறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அதற்குள் யெஸ் வங்கி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். யெஸ் வங்கி தொடர்பான முடிவுகள் மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்த பிறகு அதன் ஒப்புதலுடன்தான் எடுக்கப்பட்டுள்ளன. தனி நிறுவனத்தின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் இந்திய நிதி மற்றும் வங்கித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் விஷயமாகவும் இந்த விவகாரம் அணுகப்படும்.
நம் நாட்டு வங்கித்துறை பாதுகாப்பாக உள்ளது என நான் உறுதி அளிக்கிறேன். நாட்டின் வங்கி மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக இன்று (வெள்ளிக் கிழமை) புது டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது,”2017-ஆம் முதலே இந்த எஸ் வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அதுசார்ந்த விஷயங்கள் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப் பட்டு வந்தது. ஆபத்தான கடன் முடிவுகள் குறித்து கண்டறியப்பட்டதால் நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
"Will Not Let Any Institution Fall Off A Cliff": FM @nsitharaman on #yesbankcrisis
FM #NirmalaSitharaman assures depositors that their money will be safe. pic.twitter.com/oFRrWEIlln
— PIB India (@PIB_India) March 6, 2020
இந்த முடிவுகள் வங்கியின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. செப்டம்பர் 2018-இல் புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்பட்டு, வங்கியை சீரமைப்பதற்கானப் பணிகள் தொடங்கப் பட்டன. விசாரணை அமைப்புகளும் முறைகேடுகளைக் கண்டறிந்துள்ளன. அவசர நிலையை உணர்ந்து சட்டத்தின்படியே அனைத்து செயல்முறையும் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆர்பிஐ உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொள்கிறது.
இன்னும் 30 நாட்களில் மறுசீரமைப்புத் திட்டம் முழுமையாக செயல்படும். யெஸ் வங்கியில் முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது. யெஸ் வங்கி ஊழியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் ஒரு வருடத்துக்கு றுதியளிக்கப்படுகிறது.வாடிக்கையாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை நாங்கள் உறுதிபடுத்துகிறோம். வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைவரது பணமும் பாதுகாப்பாக உள்ளது என்பதை வாடிக்கையாளர்களிடம் நாங்கள் உறுதிபடுத்துகிறோம்” என்றார்.