மைனாரிட்டி-ன்னா யாருங்க? – சுப்ரீம் கோர்ட் குழப்பம்!

மைனாரிட்டி-ன்னா யாருங்க? – சுப்ரீம் கோர்ட் குழப்பம்!

நம் நாட்டில் அரசியல்வாதிகள் அடிக்கும் உச்சரிக்கும் வார்த்தை சிறுபான்மையினர். இதன் சரியான பொருள் அல்லது வரைமுறை அடிக்கடி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும் போக்கு நிலவுகிறது. இத்தனைக்கும் ஐக்கிய நாடுகள் சபை 1992 டிசம்பர் 18 ல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. தேச, தேசிய இன, மத, மொழி சிறுபான்மையினர்களின் உரிமைகளை உத்தரவாதம் செய்வதாக அந்தப் பிரகடனம் அமைந்திருந்தது. அது சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்டுத்துவதாகவும் இருந்தது. அந்த ஆண்டிலிருந்து சர்வதேச சிறுபான்மையினர் உரிமை தினமாக டிசம்பர் 18 கடைப்பிடிக்கப்படுகிறது. சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சிறுபான்மையினர் உரிமை தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள்சபை தனது பிரகடனத்தின் மூலம் ஒவ்வொரு அரசும் தனது நாட்டின் எல்லைக்குள் வாழும் தேச, தேசிய இன, கலாச்சார, மத,மற்றும் மொழி சிறுபான்மையின மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களது அடையாளத்தை வலுப் படுத்தத் தேவையான நிலைமைகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவித்தது. இந்தியாவில் தேசிய சிறுபான்மை ஆணையமும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஐ சர்வதேச சிறுபான்மையினர் உரிமை தினமாக கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க.வை சேர்ந்த அஷ்வினி உபாத்யாய் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். நமது நாட்டில் இந்து மக்கள் பெரும்பான்மையாக அதிக அளவில் வாழ்ந்து வருவதால் இதர மதத்தினரை சிறுபான்மையினத்தவர்களாக கருதி பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள சில மாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள் 80 முதல் 90 சதவீதம் அளவுக்கு வாழ்ந்து வருகின்றனர். இங்கு இந்துக்கள் வெறும் 2 முதல் 8 சதவீதம் மட்டுமே உள்ளனர்.

எனினும், இங்கெல்லாம் 2 முதல் 8 சதவீதம் அளவில் உள்ள இந்துக்களுக்கு சலுகைகள் கிடைப்ப தில்லை. பெரும்பான்மையினத்தவர்கள் என்ற முறையில் இவர்களுக்கான சலுகைகள் புறக் கணிக்கப்படுகிறது. சிறுபான்மையினத்தவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ள 80 முதல் 90 சதவீதம் மக்கள் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர்.

எனவே, மாநில வாரியாக சிறுபான்மையினத்தவர்கள் யார்? என்பதை அடையாளம் காணும் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இவ்வழக்கின் மனுதாரரான அஷ்வினி உபாத்யாய் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான அஷ்வினி உபாத்யாய் இதே கருத்தை முன்வைத்து தேசிய சிறுபான்மையின நல ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக இன்னும் மூன்று மாதங்களுக்குள் முடிவெடித்து அறிவிக்குமாறு தேசிய சிறுபான்மையின நல ஆணையத்தை கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வழக்கு மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.