ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

சிய கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) இலங்கையில் நடக்கிறது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த ‘சூப்பர்-4’ போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்ட வீரர்களான ரோகித் சர்மா (56 ரன்கள்), சுப்மன் கில் (58 ரன்கள்) இருவரும் அரைசதம் அடித்தனர். பின்னர் கோஹ்லி – ராகுல் ஜோடி சேர்ந்தனர். அணியின் ஸ்கோர் 24.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் என்றிருந்தபோது, மழை கொட்டி தீர்த்தது. இதனால் போட்டி ‘ரிசர்வ்’ நாளான நேற்று மாற்றப்பட்டு நிறுத்தப்பட்டதில் இருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டது.

அதை அடுத்து தொடர்ந்த போட்டியில் லோகேஷ் ராகுலும், விராத் கோஹ்லியும் சிறப்பான முறையில் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்தனர். தொடர்ந்து அமர்களப்படுத்திய இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தனர். லோகேஷ் ராகுல், விராத் கோஹ்லி இருவரும் அடுத்தடுத்து சதம் விளாசி அசத்தினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் கோஹ்லி 122 ரன்கள், ராகுல் 111 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து 357 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி முதலிலிருந்தே திணறியது. இடையில் மழையால் ஆட்டம் பாதித்து. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 32 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைப் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கினார். நேற்று 98வது ரன் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 13,000 ரன் எடுத்த வீரர் ஆனார் கோஹ்லி. இவர், 267 இன்னிங்சில் (278 போட்டி) இந்த மைல்கல்லை அடைந்தார். சச்சின் (321 இன்னிங்ஸ், இந்தியா), பாண்டிங் (341, ஆஸி.,), சங்ககரா (363, இலங்கை), ஜெயசூர்யா (416, இலங்கை) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஒருநாள் அரங்கில் 13,000 ரன்களை எட்டிய 5வது வீரர் ஆனார் கோஹ்லி.

error: Content is protected !!