ஆன் லைனில் ஆல்கஹால் ; ம.பி. அரசு குழப்பமான மறுப்பு!

ஆன் லைனில் ஆல்கஹால் ; ம.பி. அரசு குழப்பமான மறுப்பு!

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு, ஆன்லைனில் மது வகைகளை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே கொண்டுவந்து கொடுக்கப்படும் என்று மதுக் கொள்கையில் புதிய திருத்தம் கொண்டுவந்துள்ளது.  ஆனால், இந்த தகவலை மத்திய பிரதேச மாநில கலால் துறை அமைச்சர் பிரிஜேந்திர சிங் ரத்தோர் மறுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதலமைச்சராக கமல்நாத் இருக்கிறார். 2020-21 ஆம் ஆண்டுக்கான மதுக்கொள்கையில் திருத்தம் செய்து மாநில அரசு அறிக்கை வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டு மாநிலத்தில் புதிதாக மதுக்கடை திறக்க அனுமதி தரப்படாது.

அதேசமயம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, உள்நாட்டில் விற்பனைக்கு இருக்கும் மது வகை களை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டோர் டெலிவரி செய்யப்படும். சட்டவிரோதமாக மது வகைகள் விற்பனையைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வெளிநாட்டு மது வகைகள் மீதும் பார்கோடு பொறிக்கப்படும் என்பதால், கள்ளத்தனமாக அதை விற்பனைக்கு அனுப்ப முடியாது.

திராட்சை மூலம் தயாரிக்கப்படும் ஒயின்களை விற்பனை செய்வதற்காக சுற்றுலாத் தளங்களில் மட்டும் 15 புதிய கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். இந்த 15 கடைகளுக்கும் ஆண்டுக்கு 10,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.. மாநிலத்தில் உள்நாட்டு மது வகைகளை விற்பனை செய்யும் 2,544 மதுக்கடைகள், வெளிநாட்டு மது வகைகள் விற்பனை செய்யும் 1,061 மதுக்கடைகளின் ஆண்டுக் கட்டணம் 25 சதவீதம் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும்.

ஒவ்வொரு மதுக்கடையைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்குள் வேறு மதுக்கடைகள் ஏதும் இல்லாவிட்டால், அதன் அருகே துணை மதுக்கடை திறக்கப்படும். இந்தத் திட்டத்தை ஏற்கெனவே இருந்த பாஜக ஆட்சியில் முன்மொழியப்பட்டது என்று கலால் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆன்லைனில் மது விற்பனை அறிமுகம் செய்தது குறித்து பாஜக மாநில துணைத்தலைவர் ராமேஷ்வர் சர்மா கூறுகையில்,  ‘உங்கள் வீட்டு வாசலில் இனிமேல் மது கிடைக்க கமல்நாத் அரசு உதவும். மத்தியப் பிரதேசத்தை மதுவில் திளைக்கும் மாநிலமாக மாற்றி, எதிர்காலச் சந்ததியினரை இருளில் தள்ளப்போகிறது. இதன் மூலம் அரசின் நோக்கம் தெளிவாகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

அதே சமயம் மத்திய பிரதேச மாநில கலால் துறை அமைச்சர் பிரிஜேந்திர சிங் ரத்தோர் இதை மறுத்து கூறியதாவது: ‘ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படுவதாக, புதிய மது கொள்கை யில் எந்த அறிவிப்பும் இல்லை. தவறான தகவல்களை பரப்புகின்றனர். மது தயாரிப்பாளர்களுக்கும், கலால் துறையினருக்கும் இடையேயான பரிமாற்ற நடவடிக்கைகள் மட்டுமே, ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும். மது பாட்டில்கள் ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்கு கடத்தப்படுவது போன்ற சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று விளக்கம் அளித்துள்ளார்

error: Content is protected !!