சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கம்!

சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கம்!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி இன்று துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், தினசரி மாலை கவியரங்கம், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
jan 10 - book fair
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தக கண்காட்சி நடக்கும். இதில் லட்சக்கணக்கான வாசகர்கள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி குவிப்பர். இம்முறை சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த கண்காட்சி இன்று துவங்குகிறது.ஆங்கிலம்,தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 777 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலையில் இருந்து புத்தக கண்காட்சி நடக்கும் அரங்கத்துக்கு பல கி.மீ., நடந்து வர வேண்டி உள்ளதால் இம்முறை இலவச வேன் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் – வாசகர் கலந்துரையாட தனி அரங்கு; குறும்படங்கள் வெளியிட வயதானோர் ஓய்வெடுக்க தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலியும் “108” அவசர கால மருத்துவ உதவி வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்பிக்கும் போட்டிகள், இளைய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க சிறுகதைப் போட்டி ஆகியவை நடக்க உள்ளன.

இதற்கிடையில் இன்று நடக்கும் துவக்க விழாவில் சங்கம் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வார நாட்களில் பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை; விடுமுறை நாட்களில் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது.