சரவணபவன் ராஜகோபால் மரணம்!

சரவணபவன் ராஜகோபால் மரணம்!

சென்னை விஜயா ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பெற்ற வந்த சரவண பவன் உரிமையாளர் பி.ராஜகோபால் இன்று காலமானார். தூத்துக்குடியில் இருந்து வந்த வெறுங்கையுடன் வந்த சிறுவன் பல்வேறு சவால்களைச் சந்தித்து சென்னையில் துவங்கிய முதல் ஹோட்டல் வெற்றி யின் மூலம் இன்று சரவணபவன் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 700 மில்லியன் டாலருக்கும் அதிகம் என்றாலும் அல்ப சபலத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அதை நேர் கொள்ள மன வலிமையில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டவர் இன்று காலமானார்.

உயர்தர சைவ உணவகம் என்ற அழைமொழியுடன் தொடங்கப்பட்ட சரவணப் பவனுக்கு இந்தியாவில் 33 க்கும் அதிகமான கிளைகளும் மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் 47 கிளைகளும் உள்ளன. பெரும் சாதனைப் படைத்த சரவண பவன் அண்ணாச்சிக்கு 2 மனைவிகள் இருந்தபோதிலும் மூன்றாவது மனைவியாக ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அந்த ஜீவஜோதியின் தந்தை சரவணபவனில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். அப்போது டியூசன் படிக்கச் சென்ற இடத்தில் உறவினர் பிரின்ஸ் சாந்தகுமார் மீது காதல்வயப்பட்டார் ஜீவஜோதி. இந்தக் காதல் திருமணத்தில் சென்று முடிந்தது. ஆனாலும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உடையவரான ராஜகோபால், ஜீவஜோதியைத் திருமணம் செய்துகொண்டால் இன்னும் அதிக உயரத்துக்குச் செல்லலாம் என அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

ஆகவே தனது மூன்றாவது திருமணத்துக்குத் தடையாக சாந்தகுமார் இருந்ததால், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். இதையொட்டி 26.10.2001 அன்று பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தப் படுகிறார். இதுதொடர்பாக, வேளச்சேரி காவல்நிலையத்தில் ஜீவஜோதி புகார் அளிக்கிறார். அந்தப் புகாரில் ராஜகோபாலின் ஆட்கள், தன்னுடைய கணவரைக் கடத்திவிட்டதாகக் குறிப்பிடுகிறார். 5 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு கொடைக்கானல் மலை ரோட்டில் சடலமாக மீட்கப்பட்டார் பிரின்ஸ். இதையடுத்து, ராஜகோபால்தான் கொலை செய்திருப்பார் என்றார் ஜீவஜோதி. ஆனால் ` தொழில் போட்டி காரணமாக யாரோ செய்கின்ற சதி’ என்று ராஜகோபால் தரப்பினர் கூறிவந்தனர். இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தவழக்கில் ராஜகோபால், அவரது மேலாளர் டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

போலீஸாரிடம் டேனியல் கொடுத்த வாக்குமூலமே இந்த வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்தியது. சாந்தகுமாரை காரில் கடத்தியது. அவரை வாகனத்தில் வைத்து தாக்கியதாகவும் அதன்பின்னர் வேட்டியால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். இந்த வாக்குமூலம்தான் வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் சென்றது. அவ் வழக்கு விசாரணையின் முடிவில், 2004-ம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் தண்டனையும் 55 ல‌ட்ச‌ம் ரூபா‌ய் அபராதமு‌ம் ‌வி‌தி‌த்தது. கொலைக்கு உடந்தையாக இருந்த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோரு‌க்கு 7 முத‌ல் 9 ஆ‌ண்டுக‌ள் வரை த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

உடனே சாந்தகுமார் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள் பி.கே.மிஸ்ரா, பானுமதி ஆகியோ‌ர் அடங்கிய அ‌ம‌ர்வு, ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌ளி‌த்த 10 ஆ‌ண்டு ‌சிறைத்த‌ண்டனையை ஆ‌யு‌ள் த‌ண்டனையாக அ‌திக‌ரிப்பதாக அறிவித்தது. இதனால் ஷாக் ஆகி ஜாமீனில் வெளிவந்த ராஜகோபால், இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். `தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்’ என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபால் மீதான ஆயுள் தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் தற்போது பிணையில் இருக்கும் ராஜகோபால், ` ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக ராஜகோபால் கொண்டுவரப்பட்டார். நீதிபதி அவரைப் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
ஆனால் ராஜகோபால் சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனில், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் அனுமதிப்பட்டார்.

பின்னர் தனது குடும்பத்தினர் வேண்டுகோளின் படி, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜகோபால் இன்று உயிரிழந்தார்.