சென்னை காவல் ஆணையரானார் கரன் சின்ஹா !
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி காலியானது. அதனால் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே இந்த இடைத்தேர்தலில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. திமுகவின் இந்த புகாரை ஏற்று, சென்னை காவல் ஆணையர் ஜார்ஜை, இடமாற்றம் செய்து புதிய காவல் ஆணையராக கரன் சின்ஹா நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக ஆர்.கே. நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியையும் மாற்றக்கோரி திமுக புகார் செய்திருந்தது. அதை ஏற்று, அங்கு தேர்தல் அதிகாரியாக இருந்த பத்மஜா தேவி மாற்றப்பட்டு தேர்தல் அதிகாரியாக பிரவீண் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுய்.


