செய்தி அறைகளின் ‘நடுப்பக்கம்’ காலி:நசுக்கப்படும் சீனியர் ரிப்போர்ட்டர்கள்!

செய்தி அறைகளின் ‘நடுப்பக்கம்’ காலி:நசுக்கப்படும் சீனியர் ரிப்போர்ட்டர்கள்!

வ்வொரு துறையிலும் பணி நியமன முறைகள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், சமீபகாலமாக இதழியல் துறையில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் அத்துறைக்கே ஒரு சவாலாக உருவெடுத்துள்ளன. அனுபவம், ஆற்றல் மற்றும் இளமை ஆகியவற்றிற்கு இடையே நிலவ வேண்டிய சமநிலை சீர்குலைந்து வருவதை சமீபத்திய போக்குகள் காட்டுகின்றன.

முடக்கப்பட்ட நடுத்தர அடுக்கு (Mid-level journalists)

செய்தி அறைகளின் (Newsrooms) முதுகெலும்பாகக் கருதப்படுவது 5 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்ட நடுத்தர நிலை ஊடகவியலாளர்கள் தான். இவர்களிடம் தான் அனுபவமும், செய்தி குறித்த தெளிவும், நிறுவனத்தின் மீதான விசுவாசமும் இருக்கும். ஆனால், தற்போது இவர்களுக்கான வளர்ச்சி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

  • தேக்கநிலை: பல ஆண்டுகளாக ஒரே ஊதியம், ஒரே பதவி என இவர்கள் ஒரே இடத்தில் தேங்கி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

  • பணி நியமன முடக்கம்: புதிய ஆட்கள் எடுக்கும்போது ‘ஹைரிங் ப்ரீஸ்’ (Hiring Freeze) என்ற கொள்கை இந்த நடுத்தர நிலையைத் தான் அதிகம் பாதிக்கிறது. இவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அனுபவத்தை விடச் செலவைக் குறைக்கவே நிர்வாகங்கள் துடிக்கின்றன.

லாப நோக்கில் இளைய தலைமுறை (Entry-level)

மறுபுறம், ஆரம்ப நிலை வேலைகளுக்கு (Freshers/Interns) பெரும் வரவேற்பு உள்ளது. இதற்குப் பின்னால் ஒரு கணக்கீடு இருக்கிறது. ஒரு அனுபவம் வாய்ந்த நபருக்கு ₹1 லட்சம் ஊதியம் கொடுப்பதற்குப் பதில், அந்தத் தொகையை நான்காகப் பிரித்து நான்கு புதியவர்களைக் கொண்டு வேலை வாங்குவது இன்றைய ‘மாடல்’ ஆகிவிட்டது.

இதன் விளைவாக, ஒரு வேலைக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்கின்றனர். நிறுவனங்கள் அவர்களைப் பயிற்சி கொடுத்துக் குறைந்த ஊதியத்தில் வேலையில் அமர்த்துகின்றன. ஆனால், இந்த இளைஞர்கள் சிறந்த வாய்ப்பு கிடைக்கும்போது உடனடியாகப் பணி மாறி விடுகின்றனர். இதனால் செய்தி அறைகளில் தொடர்ச்சி (Institutional memory) இல்லாமல் போகிறது.

உச்சத்தில் உயரும் ஊதியங்கள்

கீழ் மட்டத்தில் செலவுக் குறைப்பு (Cost-cutting) பேசும் அதே நிர்வாகங்கள், மேல் மட்டத்தில் உள்ள இயக்குநர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு (Senior leadership) வாரி வழங்குகின்றன. ஆங்கில செய்தி ஊடகங்கள் தங்களின் பொருத்தத்தை (Relevance) இழந்து வரும் சூழலிலும், இந்த உயர்மட்டப் பதவிகளுக்கு மட்டும் ஊதியம் மட்டும் விண்ணைத் தொடுகிறது. இது அடிமட்ட மற்றும் நடுத்தர ஊழியர்களிடையே பெரும் மனச்சோர்வை ஏற்படுத்துகிறது.

30-ஐக் கடந்தால் தடையா? (Age-based Bias)

ஊடகத்துறையில் தற்போது நிலவும் ஒரு கசப்பான உண்மை, வயது சார்ந்த பாகுபாடு. 30 வயதைக் கடந்த ஒருவரை நடுத்தரப் பதவிக்கு எடுக்கத் தயங்கும் நிறுவனங்கள், அதே சமயம் 40 அல்லது 50 வயதைக் கடந்தவர்களை உயர்மட்டப் பதவிகளுக்குக் கூடுதல் ஊதியம் கொடுத்து அமர்த்துகின்றன. இது ஒரு முரண்பாடான சூழலை உருவாக்குகிறது.

சிதையும் இதழியல் கனவு

இத்தகைய சமமற்ற போக்கு தொடர்ந்தால், இதழியல் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்க விரும்பும் இளைஞர்களின் ஆர்வம் குறையும். அனுபவத்திற்கு மதிப்பு தராத ஒரு துறையில் நிலைத்து நிற்க எவரும் விரும்பமாட்டார்கள்.

ஒரு செய்தி நிறுவனம் என்பது வெறும் செலவு-வரவு கணக்குகளால் மட்டும் இயங்குவது அல்ல. அது விசுவாசமான, அனுபவம் வாய்ந்த மற்றும் ஆற்றல் மிக்க குழுக்களால் கட்டப்பட வேண்டிய ஒன்று. அனுபவத்தை வெறும் செலவாகப் பார்க்காமல், ஒரு முதலீடாகப் பார்க்கும் சூழல் திரும்பினால் மட்டுமே இதழியல் தரம் தப்பிப் பிழைக்கும்.

நிலவளம் ரெங்கராஜன்