உலக விலங்கு தினம்: விலங்குகளின் உரிமைகளுக்காக ஒரு நாள்
உலக விலங்கு தினம், பொதுவாக உலக விலங்கு நல தினம் (World Animal Welfare Day) அல்லது உலக விலங்கு பாதுகாப்பு தினம் (World Animal Protection Day) என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 அன்று உலகம் முழுவதும் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இது விலங்கு உரிமைகள் மற்றும் விலங்கு நலன் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த நாளை உருவாக்கியவர் ஹென்ரிச் சிம்மர்மேன் (Heinrich Zimmermann) ஆவார். விலங்குகளுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு முடிவு கட்டி, அவற்றின் நலனைப் பாதுகாப்பதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

இயற்கையின் வரமான விலங்குகள்
ஐந்தறிவு கொண்ட உயிரினங்களான விலங்குகள், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன. வீட்டு விலங்குகளாக மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, காட்டு விலங்குகளாக இயற்கைப் பாதுகாப்பிற்கும் துணை நிற்கின்றன. மனிதனின் வாழ்க்கைச் சூழலுக்கு இன்றியமையாத இவைகளின் மதிப்பை உலக மக்களுக்கு உணர்த்தவும், அவற்றின் நலம் மற்றும் தரத்தை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
விலங்கு (Animal) என்ற சொல் லத்தீன் மொழியில் இருந்து வந்தது. விலங்குகள் முதலில் கடலில் தான் தோன்றின. அரிஸ்டாட்டில் விலங்குகளை இரத்தம் உள்ளவை மற்றும் இரத்தம் இல்லாதவை என இரு வகையாகப் பிரித்தார். பின்னர் 1758 ஆம் ஆண்டில் கார்ல் லின்னேயஸ் என்பவர் உயிரியல் வகைபாட்டினை உருவாக்கினார்.
இன்று பூமியில் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் முதல் சுமார் 110 அடி நீளமுள்ள நீலத் திமிங்கிலம் (Blue Whale) வரை வாழ்கின்றன. சுமார் 10 மில்லியன் விலங்கு இனங்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவற்றில் 1.52 மில்லியன் இனங்கள் மட்டுமே அறிவியல் பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன.
அழிவை நோக்கிச் செல்லும் விலங்கினங்கள்
விலங்குகளும் அவற்றின் சுற்றுச்சூழல் வாழ்விடங்களுக்கும் இடையே உள்ள உறுதியான உறவு பாதிக்கப்படும்போது, இனங்கள் அழிய நேரிடுகின்றன. ஒரு இனத்தின் சராசரி ஆயுட்காலம் 1 முதல் 10 மில்லியன் ஆண்டுகள் என்றாலும், சமீப காலங்களில் விலங்குகளின் அழிவு விகிதம் கவலைக்கிடமாக அதிகரித்து வருகிறது.
2019 ஆம் ஆண்டின் உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கையின்படி, காட்டு பாலூட்டிகளின் எண்ணிக்கை 85 சதவீதம் குறைந்துள்ளது. இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள் தங்கள் பரப்பளவில் பாதியை இழந்துள்ளதால், ஒரு மில்லியன் இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன. இதற்குக் காரணம் பெரும்பாலும் மனித நடவடிக்கைகளே ஆகும்.
விலங்கினங்கள் அழிவைச் சந்திக்கும் முக்கிய காரணங்கள்:
- விவசாயம் செய்வதற்காக காடுகள் அழிக்கப்படுதல்.
- வாழ்விட இழப்பு மற்றும் பாலைவனமாக்கல்.
- மாசடைதல் மற்றும் காலநிலை மாற்றம்/புவி வெப்பமடைதல்.
- வேட்டையாடுதல்.
மனிதர்களால் விலங்குகளுக்கு ஏற்படும் துன்பங்கள்
மனிதர்களின் தேவைக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் பில்லியன் கணக்கான விலங்குகள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கின்றன.

பண்ணை மற்றும் உணவுக்கான பயன்பாடு:
ஆண்டுதோறும் சுமார் 80 பில்லியன் நில விலங்குகள் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் 56 பில்லியன் விலங்குகள் மக்களின் உணவு முறையில் சிக்கியுள்ளன. இறைச்சி, முட்டை, பால், தோல், உரோமம், கம்பளி போன்றவற்றை மனிதர்கள் விலங்குகளிடமிருந்து பெறுகின்றனர். பண்ணை விலங்குகள் இயற்கைக்கு மாறான சூழலில் வாழ்ந்து, தேவையற்ற மற்றும் தீவிர உளவியல் மற்றும் உடல் ரீதியான துன்பங்களைச் சந்திக்கின்றன. இந்த விலங்குகளுக்கு உணவளிக்கப் பயிர்கள் வளர்க்கப்படும்போது, காட்டு விலங்குகளின் வாழ்விடங்களும் அழிக்கப்படுகின்றன.
சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு:
- யானைகள்: பெரிய விலங்கான யானைகள் சிறைபிடிக்கப்பட்டு சங்கிலியால் கட்டப்படுகின்றன. அவை தங்கள் சமூகத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல், போதிய உணவின்றி மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றன. சுற்றுலாத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் இந்த யானைகள் காடுகளுக்கே சொந்தமானவை, ஆனால் பல ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்ட பின் மீண்டும் காட்டுக்குள் விடுவது கடினமானதாகிறது.
- திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள்: தற்போது உலகெங்கிலும் உள்ள உயிரியல் பூங்காக்கள், மீன்வளம் அல்லது கடல் பூங்காக்களில் சுமார் 3,000 திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவை இளம் வயதிலேயே தாய்மார்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, மிகச் சிறிய தொட்டிகளில் அடைக்கப்படுகின்றன. பயிற்சி நோக்கங்களுக்காக உணவை இழக்க நேரிடுவதால், இவைகளுக்கு நிலையான மன அழுத்தமும் துன்பமும் ஏற்படுகின்றது.
உலக விலங்கு தினம் என்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான உறவை மறுபரிசீலனை செய்ய ஒரு வாய்ப்பாகும். விலங்குகளைப் பாதுகாப்பது என்பது அவற்றின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, அவற்றின் வாழ்வாதாரத்தைப் பேணிக்காப்பதுடன், நமது பூமியின் சுற்றுச்சூழல் சமநிலையையும் காப்பதாகும்.
நிலவளம்ரெங்கராஜன்


