32°C

மணிப்பூரில் அமைதி திரும்பட்டும்!!

admin Published: May 7, 2023 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

ப்போது பற்றியெறியும் மணிப்பூர் அரசியலை உற்றுக் கவனித்தால், தமிழகமும் திராவிட மாடலும் அதனின்று நல்லதொரு பாடத்தை கற்றுக் கொள்ள முடியும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மணிப்பூர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகும். மக்களவைக்கு வெறும் 2 எம்பிக்களை அனுப்பும் சிறிய நிலப்பரப்பு. மாநில சட்டமன்றம் 60 உறுப்பினர்களைக் கொண்டது. மெய்டெய் மக்கள் பெரும்பான்மையாக சமவெளியில் வசிக்கின்றனர். மெய்டெய் மொழியே மணிப்பூரின் மாநில மொழி. மக்கள் தொகையிலும் ஏறத்தாழ அறுபது சதவீதம் இவர்களே. மாநிலத்தின் சட்டமன்றத்தில் அறுபதுக்கு நாற்பது இடங்கள் இவர்கள் வசம். ஆனாலும், மெய்டெய் பழங்குடிகள் தங்களை அரசின் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி பட்டியலில் சேர்த்து, எஸ்டி இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது நிச்சயம் எஸ்டி பிரிவினரின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மட்டுப் படுத்தும். எனவே, மலையில் வசிக்கும் நாகா, குகி உள்ளிட்ட பழங்குடி எஸ்டி மக்கள் பேராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த பிறகு அங்கு சித்து விளையாட்டுகள் துவங்கின. குறிப்பாக, மெய்டெய் குடிகளை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று, கங்குகளைக் கிளறி விட்டது.சமீபத்தில், பாஜக முதல்வர் பைரன்சிங் திறந்து வைத்த ஒரு உடற்பயிற்சிக் கூடம் தாக்குதலுக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து, மலைவாழ் குகி மக்கள் வசிக்கும் சில பகுதிகளை ஆக்ரமிப்பு என்று கூறி அப்புறப் படுத்தும் வேலையை மணிப்பூர் பாஜக அரசு துவங்கியது. அவ்வளவுதான் கலவரம் மூண்டு விட்டது.

சாதாரணமாக இதைக் கவனித்தாலே இதில் செயல்பட்டுள்ள பிரித்தாளும் சூழ்ச்சி நன்கு விளங்கும். சமூகங்களை மோதவிட்டு ஆதாயம் தேடுவது பாஜகவுக்கு கைவந்த கலை. மணிப்பூரில் 2017 சட்டமன்ற தேர்தலில் 28 இடங்களை காங்கிரஸ் வென்றிருந்தது. ஆட்சி அமைக்க அக்கட்சிக்கு மேலும் 3 இடங்கள் தேவைப்பட்டது . ஆனால், 21 இடங்களை மட்டுமே வென்ற பாஜக வுக்கு மணிப்பூரின் தேசிய மக்கள் முன்னணி(NPP), நாகா மக்கள் முன்னணி(NPF)யும் ஆதரவு தந்து முதன்முறையாக பாஜகவை ஆட்சி அமைக்க வைத்தன.

2022 தேர்தலில் பாஜக 32 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சிகள் சிதறடிக்கப்பட்டு விட்டன. இப்போது NPPயும் NPF ம் செய்த தவறு அக்கட்சிகளுக்கு விளங்கி இருக்கும். ஆனால் பயனில்லை. இப்போது மணிப்பூரின் பெரும்பான்மைவாத மெய்டெய் சமூக அரசியலை பாஜக ஊக்குவிக்கிறது. மெய்டெய் வெர்சஸ் நாகா, குகி மலைவாழ் பழங்குடிகள் எனும் இந்த மோதலின் இறுதியில், மலை வளங்கள் யாவும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு சுரண்டப் படுவதுதான் நடக்கும் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை.

மாநிலத்தில் பாஜகவை நுழைய விட்டதற்கு மிகப்பெரிய விலையை மணிப்பூர் கொடுத்துக் கொண்டுள்ளது. கிளறி விடப்பட்டுள்ள சமூக மோதல்கள் தணிந்து மணிப்பூரில் அமைதி திரும்புவது அத்தனை எளிமையாய் இருக்கப் போவதில்லை. தமிழகத்தில்,திராவிடத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்று உழைத்துக் கொண்டுள்ள சக்திகளை பாஜக ஆர்வமாக தூண்டி விடுவது மற்றொரு குஜராத்/உபி/ மணிப்பூர் அரசியல் தான். இதற்கு, திராவிட மாடலின் சறுக்கல்களும் உதவுகின்றன என்பதும் மறுப்பதற்கில்லை.

தமிழகத்தில் பாஜக , பாமக, அதிமுக, நாதக, அமமுக, பிற ஹிந்து அடிப்படைவாத அமைப்புகள் என பலவும் சுறுசுறுப்பாக திராவிட மாடலை அரித்துக் கொண்டுள்ளன. இறுதியில் இவை யாவும் சிதறடிக்கப் பட்டு பாஜக ஒற்றையாய் வலிமை பெறும். அது எத்தனை மெதுவாக நடந்தாலும் அதை நோக்கித்தான் பாஜக உழைக்கிறது.

மணிப்பூரில் அமைதி திரும்பட்டும்.

இங்கு, திராவிட மாடல் கூடுதல் சுரணை பெறட்டும்.

ஜீவகன்