தொடர் கனமழை : பள்ளி, கல்லூரிகள் விடுமுறை & இலவச சாப்பாடு! – முதல்வர் அறிவிப்பு
![தொடர் கனமழை : பள்ளி, கல்லூரிகள் விடுமுறை & இலவச சாப்பாடு! – முதல்வர் அறிவிப்பு](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/11/rain-nov-9a.jpg)
தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 10.11.2021 மற்றும் 11.11.2012 ஆகிய இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மழை பாதிப்பு சரியாகும் வரை அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை விவரம் வருமாறு:
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் 10.11.2021 மற்றும் 11.11.2012 ஆகிய இரண்டு நாட்களுக்கு உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணை வெளியிடப்படுகிறது என அரசுச் செயலாளர் டி. ஜகந்நாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை, போரூர், பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவினைச் சுவைத்து தரத்தினை ஆய்வு செய்தார். pic.twitter.com/MgTdJF269u
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 9, 2021
மேலும் போரூர், பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவினைச் சுவைத்து தரத்தினை ஆய்வு செய்தார். அங்கு தினசரி சுமார் 400 நபர்கள் உணவருந்த வரும் விவரத்தினை கேட்டறிந்த முதலமைச்சர், மழைக்காலங்களில் மக்களுக்கு தவறாது தொடர்ந்து உணவளித்திட வேண்டும் என்று அம்மா உணவக ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். மழை பாதிப்பு சரியாகும் வரை அம்மா உணவகத்தில் இலவச சாப்பாடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.