அடுத்த 2 வாரங்களில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் இயல்பை விட கூடுதலாக பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது. தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு அக்டோபர் 1 ந்தேதி முதல் நவம்பர் 2 ந்தேதி வரை 261.7 மி.மீ பெய்துள்ளது.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை இருந்து வந்த நிலையில் அடுத்த இரண்டு வாரத்திற்கான மழை குறித்த முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதில் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து அடுத்த இரண்டு வாரத்தில் உள் தமிழ்நாடு மற்றும் தென் தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை இயல்பான அளவை விட 26 சதவீதம் அதிகமான மழையும், குறிப்பாக கடந்த வாரம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை 48 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.