வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி!
![வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி!](https://www.aanthaireporter.in/wp-content/uploads/2021/11/vanni-nov-1.jpg)
வன்னியர் இட ஒதுக்கீடு – அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை தீர்ப்பு வழங்கியுள்ளது.வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தமிழக அரசின் சட்டத்தை செய்து உள்ளது ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது.
கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு ஒதுக்கீட்டில், 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சுவாமிநாதன் உள்பட 25க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
மதுரைக் கிளை தீர்ப்பு மனுத்தாரர்களின் வாதம், அரசு தரப்பு வாதம், இடையீட்டு மனுதாரரான பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு வாதம் என அனைத்து தரப்பு வாதங்களும் ஐகோர்ட்டில் பதிவுசெய்யப்பட்டன. இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (நவ. 1) தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் மதுரைக்கிளையில், நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு கூறியதாவது,” தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் நிலையில், அதற்குள் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ளதா?, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா?, முறையான அளவுசார் தரவுகள் (Quantifiable Data) இல்லாமல் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? உள்ளிட்ட ஆறு கேள்விகளை அரசிடம் எழுப்பினோம்.இதற்கு, அரசு அளித்த பதில் ஏற்புடையதாக இல்லை. இது, தீர்ப்பில் விளக்கப்பட்டுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது” என்றனர்.
மேலும், வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது எனக்கூறி, அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.