‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறால் பின்னடைவு! – வீடியோ!

‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறால் பின்னடைவு! – வீடியோ!

பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி ‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ ராக்கெட், இன்று வானில் சீறிப்பாய்ந்த நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இலக்கை எட்டவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), பூமி கண்காணிப்புக்காக 2,268 கிலோ எடை கொண்ட ஈஓஎஸ்03 என்ற செயற்கைகோளை வடிவமைத்தது. அதனை ‘ஜிஎஸ்எல்வி எஃப்-10’ ராக்கெட்டில் பொருத்தினர். அதனைத் தொடர்ந்து, ராக்கெட்டுக்கு உந்து சக்தியாக உள்ள எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான 14 மணி நேர ‘கவுன்ட்டவுன்’ நேற்று பிற்பகல் 3.43 மணிக்குத் தொடங்கியது.

இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். தொடர்ந்து ‘கவுன்ட்டவுனை’ முடித்து கொண்டு இன்று காலை 5.43 மணிக்கு, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணை நோக்கி தீ பிழம்பை கக்கியவாறு சீறிபாய்ந்தது.

இந்த ராக்கெட்டில் முதன்முறையாக வெப்பத்தில் இருந்து அதிக எடை கொண்ட செயற்கைகோள் மற்றும் அதில் உள்ள மின்னணு பொருட்களை பாதுகாப்பதற்காக ராக்கெட்டின் கூம்பு வடிவிலான முகப்பு பகுதியில் தனியாக வெப்பத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்ட இலக்கில் செயற்கைகோளை நிலை நிறுத்தும் வரை செயற்கைகோள்களை இந்த வெப்பத்தகடுகள் பாதுகாத்து கொள்கிறது.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், நடப்பு ஆண்டில் பிப்ரவரி 28ஆம் தேதி ‘பிஎஸ்எல்வி சி-51’ ராக்கெட் மட்டுமே வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டது ஜிஎஸ்எல்வி ரகத்தில் 14 வது ராக்கெட்டாகும். கொரோனா பரவல் காரணமாக இன்று பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் இரு படிநிலைகள் சிறப்பாகவே செயல்பட்டு பிரிந்தன. ஆனால், செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தவில்லை. ராக்கெட்டின் கிரயோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப்10 ராக்கெட் திட்டம் முழுமை அடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரோ தலைவர் கே. சிவன் அளித்த பேட்டியில் ‘ ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டின் கிரயோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முடியவில்லை. என்னுடைய நண்பர்களுக்கு இதைக் கூற விரும்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!