சட்டப் பேரவையில் ஆளுநர் உரை – முழு விபரம்!

சட்டப் பேரவையில் ஆளுநர் உரை – முழு விபரம்!

சென்னை கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சட்டப்பேரவை வளாகத்தில் 16ஆவது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது. அப்போது உரையாற்றிய ஆளுநர், ‘கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிற் நிறுவனங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவியாக 10 ஆயிரத்து 68 கோடி ரூபாயை புதிய அரசு பதவியேற்றதிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வரும் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் என்றும், இதன்மூலம் மாநிலத்தின் நிதிநிலை குறித்த முழுமையான விவரம் பொதுமக்களுக்கு தெரிய வரும்’ எனவும் உரையில் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. சட்டப் பேரவைத் தோதலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்துள்ளார்.

ஆளுநர் உரையில், ‘நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 16-வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரில் இங்கு கூடியிருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களாட்சியின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்த மாமன்றத்தில் வீற்றிருக்கும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் எதிர்பார்க்கப்படும் கடமைகளை, நீங்கள் ஒவ்வொருவரும் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

அண்ணல் அம்பேத்கர் வகுத்தளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இறையாண்மையும், சமத்துவச் சமுதாயமும், மதச்சார்பின்மையும் கொண்ட மக்களாட்சியின் மாண்பு அமையப்பெற்ற குடியரசாக இந்தியா மலர வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் எடுத்த தீர்க்கமான முடிவால், இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்றுள்ள மகத்தான வெற்றி இந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டு.

சமூக நீதி, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதி, இட ஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு, கல்வி மற்றும் சமூகச் சீர்திருத்தத்தின் மூலம் முன்னேற்றம் ஆகிய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இந்த அரசு தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்த அரசின் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு முயற்சியும் மேற்கூறிய கொள்கைகளையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

தமக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எந்த பாரபட்சமும் இன்றி, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்குமான அரசாக இந்த அரசு எப்போதும் செயல்படும். அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் இந்த அரசின் நெறிமுறைக்கு ஏற்ப, தொடர்புடையோர் அனைவரையும், அனைத்துத் தரப்பு மக்களையும், சட்டமன்றப் பேரவையிலுள்ள அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசித்து, கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வது குறித்து இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

திராவிட இயக்கத்தின் மகத்தான தலைவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசு பதவியேற்றுள்ளது. இந்த மாமன்றத்தில் அறுபதாண்டுகள் அரும்பணியாற்றிய ஓர் ஒப்பற்ற தலைவராக அவர் திகழ்ந்தார். அவர் நம்முடன் இன்று இல்லை என்றாலும், அவருடைய கொள்கைகள் இந்த அரசை எப்போதும் வழிநடத்திச் செல்லும்.

மக்களாட்சியின் மாண்பின் மீது அவர் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையைத் தொடர்ந்து பின்பற்றும் வகையில், ஓர் உண்மையான குடியரசின் உயிர்நாடியாக விளங்கும் நமது மக்களாட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.

மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்புச் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும், இந்த அரசு உறுதியாக உள்ளது. வலுவான மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்கிட முடியும். இந்த அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், மாநில அரசுகளின் உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு அதைக் கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில், ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம்’ என்ற கொள்கைக்கு ஏற்ப, நாட்டை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் கூட்டு முயற்சியாளர்களாக, மத்திய அரசுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணும்.

இந்த அரசு பதவியேற்றபின் முதல்வர் ஸ்டாலின் புதுடெல்லி சென்று, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசுக்குத் தேவைப்படும் உதவிகள், தமிழக அரசின் கொள்கை கோட்பாடுகளின் அடிப்படையில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டிய பிரச்சினைகள், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்படும் முக்கிய திட்டங்கள் ஆகியவற்றை விளக்கி, மத்திய அரசின் உதவியைக் கோரும் பல்வேறு கோரிக்கைகளை பிரதமரை நேரில் சந்தித்து அளித்தார். இந்தக் கோரிக்கைகள் குறித்து ஆய்ந்து, தமிழக அரசிற்குத் தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம்’.என்று உரை வாயிலாக தெரிவித்தார்.

மேலும் உரையில் இடம் பிடித்த சாராம்சம்

மாவட்டந்தோறும் பணியாற்றும் மகளிருக்கு என்று விடுதிகள் கட்டப்படும்.

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகள் விரைவில் கட்டி முடிக்கப்படும்.

அரசுப் பணிகளில் காலியாக உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும்.

மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற இலக்கை எட்ட அரசு உறுதியாக உள்ளது.

தமிழை இந்திய அலுவல் மொழியாக ஆக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்.

அனைத்து மக்களுக்கான அரசாக திமுக அரசு செயல்படும்.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அண்ணாவின் பொன்மொழிக்கு ஏற்ப திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும், திருத்தங்களும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.335 கோடி கிடைத்துள்ளது.

மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.

விவசாயிகள் நலன் காக்க, ஆண்டுதோறும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப்படும்.

நிதிநிலை குறித்து ஜூலை மாதத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

தமிழகத்துக்கு தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்க, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்காமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலத்தடிநீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம்.

கச்சத்தீவை மீட்பது, மீனவர் நலன் பாதுகாப்பு போன்றவற்றுக்கு தீர்வு காண ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க தொழிலதிபர்கள், நிதித்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.

கோயில் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்களின் தணிக்கை செயல்முறைகளை நெறிப்படுத்தப்படும்.

மதுரவாயல் துறைமுகம் வரையிலான உயர்மட்ட சாலை திட்ட பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டின் சுற்றுலா திறனை முழுமையாக வெளிக் கொண்டுவர நடப்பாண்டில் திட்டம் வெளியிடப்படும்.

2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த அனைவருக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்.

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும்.

பெரிய நகரங்களில் நெருக்கடியை குறைக்க புறநகர் பகுதிகளில் நவீன வசதியுடன் துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

மதுரை, திருச்சி, சேலம், நெல்லையில் பெருந்திரள் விரைவு போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது விநியோக திட்டத்துக்கு பருப்பு, பாமாயில், சர்க்கரை கொள்முதல் செய்யும் நடைமுறை சீராக்கப்பட்டதால் அரசுக்கு நிதி.

பொருளாதார மந்த நிலையை போக்கும் வகையில் அரசுக்கு ஆலோசனை வழங்க முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

சென்னை மாநகர கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் புதுப்பிக்கப்பட்டு புத்துயிரூட்டப்படும்.

அரசுப்பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலி பணியிடங்கள் சிறப்பு நியமனம் மூலம் நிரப்பப்படும்.

கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாது திட்டத்தை நிராகரிக்குமாறு ஒன்றிய அரசு திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

இளைஞர்களை பயன்படுத்தி தமிழ்நாட்டிலுள்ள நீர்வளம் மீட்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

2021-22, 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் மூலம் இதுவரை 63,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!