கொரோனா வைரஸ் 2ஆம் அலையின் புதிய அறிகுறிகள்!

கொரோனா  வைரஸ் 2ஆம் அலையின் புதிய அறிகுறிகள்!

நாடெங்கும் இருக்கும் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் தட்டுப்பாடு, வெண்டிலேட்டர் மற்றும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு என்று நிலைமை இருக்கிறது. இந்த நிலையில், வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை என்றும் ஆனால் இதுதான் நிதர்சனம் எனவும் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மோசமான சூழலை நாம் முழு அளவில் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ள நிலையில் 2 ஆம் அலையில் ஏற்பட்ட கொரோனா வைரஸில் புதிய அறிகுறிகள் காணப்படுவதாக, டெல்லி ஹெல்வேதியா மருத்துவமனை மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா முழுக்க கொரோனா பாதிப்பின் புதிய அலை தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் காணப்பட்ட முதல் அலையை விட 2வது அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இதுபற்றி டெல்லியில் உள்ள ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் டாக்டர் சவுரதீப்த சந்திரா கூறி இருப்பதாவது:–

ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் புதிய உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய முடிவதில்லை. இரண்டு மற்றும் மூன்று வகையில், உருமாறிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டு உள்ளது என நான் நம்புகிறேன். இவற்றின் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால், ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் அவற்றை கண்டறிய முடிவதில்லை. இந்த புதிய வகைகள், புதிய அறிகுறிகளை தோற்றுவிக்க கூடியவையாக காணப்படுகின்றன.

புதிய அறிகுறிகள்

வழக்கம்போல் காணக்கூடிய அறிகுறிகளான வறட்சி, உடல் வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் கூட வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோலில் புண் ஏற்படுதல், குழப்ப நிலை, கை மற்றும் கால் விரல்களின் நிறங்கள் நீல நிறத்திற்கு மாறுதல், மூக்கு மற்றும் தொண்டை வழியே ரத்தம் வருதல் போன்றவையும் காணப்படுகின்றன.

முதல் அலையை விட நாட்டில் 2 வது அலை ஆபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது. பரிசோதனை மையங்கள் உள்பட கூட்ட நெருக்கடியான இடங்களில், மக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் புதிய வகை உருமாறிய வைரசானது எளிதில் தொற்றும் தன்மை கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

நம்முடைய சுகாதார உட்கட்டமைப்பும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கையாளும் வகையில் இல்லை. ஆக்சிஜன், படுக்கை மற்றும் அத்தியாவசிய மருந்துகளும் பற்றாக்குறையாக காணப்படுகிறது. உயிரிழப்பு விகிதமும் கடந்த அலையை விட அதிகரித்து காணப்படுகிறது.

எனவே தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். ஒரு சில வாரங்களில் பாதிப்பு உச்சம் அடையும். அதன்பின்னர் குறையும் என்று கூறியுள்ளார்.

Related Posts

error: Content is protected !!