ஹெல்மெட் சட்டத்தை எதிர்த்து வழக்கு?!
உலகிலேயே அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 1.5 லட்சம் பேர் விபத்தில் உயிர் இழக்கின்றனர் . சுமார் 5 லட்சம் பேர் உயிர் போவதற்கு இணையான கை, கால் இழப்பால் வாழ்வை இழக்கின்றனர் . உயிர் இழப்போடு இந்திய அரசுக்கு சாலை விபத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 55 ஆயிரம் கோடிகள் பணமும் இழப்பு ஏற்படுகிறது . இந்நிலையில் சாலை விபத்துக்களில் தேவையற்ற உயிரிழப்புக்களைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி சென்னை ஹைகோர்ட் ஆணையிட்டது. அதனடிப்படையில், அதே ஆண்டின் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தமிழகத்தில் இரு சக்கர ஊர்திகளில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின் 100 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை தமிழகத்தில் அந்த ஆணை முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.தலைக்கவசத்தை கட்டாயமாக்கும் ஆணையை உறுதியாக செயல்படுத்தும்படி அவ்வபோது காவல்துறையினரை அரசு கேட்டுக் கொள்வதும், அடுத்த சில வாரங்களுக்குப் பின் இந்த ஆணை கிடப்பில் போடப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று சென்னை ஹைகோர்ட் கடந்த 8-தேதி உத்தரவிட்டிருந்தது. இது சம்பந்தமான முந்தைய விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மட் அணிவது கட்டாயம் என்றும், ஹெல்மட் அணியாவிட்டால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இது குறித்த ஒரு வழக்கு விசாரணையில் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.அதே நேரம், இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்கார்ந்து பயணம் செய்யும் பெண்கள், 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆகியோர் ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியம் இல்லை. அதில் அவர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற முன்னர் வந்த செய்தியும் தவறாம்.இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமல்ல பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் போட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
அதே சமயம் ” இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்தாலும் எதிரே வரும் கண் கூசும் முகப்பு விளக்குகளால் விபத்தில் சிக்கி முகவரி இழந்தவர்கள் அதிகம் . ஹெலோஜென், லேசர் , எல்இடி பல்புகள், எனப் பல விதங்களில் ஹெட் லைட் எனப்படும் முகப்பு விளக்குகள்” ஹெட்டை கழற்றி விடுகின்றன . இரு சக்கர வாகனம் மட்டுமின்றி நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கொடுக்கும் அதி நவீன ஒளியால் முன்னால் நிற்கின்ற வாகனம் கூட தெரியாமல் நின்ற வாகனத்தில் மோதி பலர் சாவு என்ற சோகச் செய்தி தொடர்கிறது .
நான்கு வழிச்சாலையில் நடு மையத்தில் எந்த ஒளித் தடுப்பும் இல்லாத நிலையில் கண்களில் ஏற்படும் ஒரு சில நொடி பார்வை இழப்பு, வாழ்வை முடித்து விடுகிறது. வலது புறம் வரும் வாகனத்தின் ஒளியால் தோராயமாக (குத்து மதிப்பாக) தான் வண்டி ஓட்டும் நிலை உள்ளதால் விபத்தின் பாதிப்பு அதிகம்.இதை முதலில் நடைமுறைப்படுத்தி விட்டு ஹெல்மெட் சட்டத்தைத் தீவீரப்படுத்த வேண்டும்” என்று ஒரு தரப்பு வழக்கு போட ஆயத்தமாகி விட்டதாம்!