நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் – நம்ம சந்திraயான் கண்டுபிடிப்பு!

நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் – நம்ம சந்திraயான் கண்டுபிடிப்பு!

நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்த இஸ்ரோவின் சந்திரயான் – 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக ChaSTE கருவி சந்திரனின் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள, தென் துருவத்தைச் சுற்றியுள்ள நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையை அளவிடுகிறது என்று தகவல் வந்தது. அதில் உள்ள வெப்பநிலையை அளவிடும் சாதனம் மேற்பரப்புக்கு கீழே 10 செ.மீ. அடியில் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது. அதில் வெப்பநிலையை அளவிடும் 10 சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சந்திரயான் -3 நிலாவில் தரையிறங்கியதில் இருந்து வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், (ஆகஸ்ட் 27) விண்கலத்தின் பிரக்யான் ரோவர் பயணித்த பாதையில் பெரும் பள்ளத்தை உணர்ந்துள்ளது. பாதுகாப்பான இடத்தில் இருந்து அந்தப் பள்ளத்தை உணர்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் பாதையை மாற்றியமைத்துள்ளனர். அதன்படி, தற்போது ரோவர் புதிய பாதையில் சீராகப் பயணிப்பதாக இஸ்ரோ தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் நிலவின் தென் துருவத்தில் கனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட பதிவில், பிரக்யான் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள லேசர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கருவி, நிலவின் தென் துருவத்தில் சல்பர் தனிமம் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதேபோல், அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டினியம், மக்னிசீயம், சிலிகான் ஆகிய தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் ஆக்சிஜன் இருப்பதும் உறுதியாகியுள்ளது. ஹைட்ரஜன் உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள தனிமங்கள் தொடர்பான சந்திரயான்-3 விண்கலம் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் குறித்து மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பில் பணியாற்றும் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம். “நிலவில் ஆக்சிஜன், கந்தகம், இரும்பு உள்ளிட்ட தனிமங்களின் இருப்பை சந்திரயான்-3 விண்கலம் உறுதிப்படுத்தியுள்ளது. பிரக்யான் ரோவர் மண்ணை அகழ்ந்து ஆய்வு செய்து இதனை உறுதி செய்திருக்கிறது. அதற்காக அந்த தனிமங்கள் நிலவில் அப்படியே தனித்து இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அந்த தனிமங்கள் நிலவில் எந்த வடிவிலும் இருக்கலாம்.

அதாவது, ஆக்சிஜன் என்பது ஆக்சைடு வடிவத்திலோ அல்லது வேறு ஏதேனும் ரூபத்திலோ இருக்கலாம். அதேபோல்தான், இரும்பு, கந்தகம் போன்ற பிற தனிமங்களும் இருக்கக் கூடும். அது குறித்து கிடைத்துள்ள தரவுகளை இஸ்ரோ இனி வரும் நாட்களில் பகுப்பாய்வு செய்து முடிவுகளை வெளியிடும். ஹைட்ரஜன் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடர்கின்றன. அதுவும் கூட, ஹைட்ராக்சைடு போன்ற ஏதோ ஒரு வடிவில் இருக்கக் கூடும். அடுத்து வரும் நாட்களில் அதுகுறித்த தகவல்கள் பிரக்யான் ரோவருக்கு கிடைக்கக் கூடும்.” என்று அவர் கூறினார்.

நிலவில் மனித குடியேற்றங்கள் சாத்தியமா?

தற்போதைய கண்டுபிடிப்புகள் நிலவில் குடியேறுவது, விண்வெளி ஆராய்ச்சிக்கான தளமாக நிலவை உருவாக்குவது போன்ற மனித குலத்தின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு உதவக் கூடும் என்று அவரிடம் கேட்டோம். அதற்குப் பதிலளித்த அவர், “நிலவில் ஆக்சிஜன் கண்டு பிடிக்கப் பட்டுவிட்டது. ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒருவேளை இரண்டும் இருந்தாலும் அவை எந்த வடிவில் இருக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-1 விண்கலம் நிலவில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துக் கூறியுள்ளது. அது நிரூபணமானால், ஏதோ ஒரு வடிவில் தண்ணீர் கிடைத்தால் அது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும். மனித குலத்திற்கே ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். ஏனெனில், தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய இரண்டையும் பிரித்து நாம் சுவாசிக்க, நமது விண்கலன்களுக்கு எரிபொருளாக என பல விதங்களிலும் அவற்றைப் பயன்படுத்தலாம். அந்த நிலையை எட்டினால்தான், நிலவில் மனித குடியேற்றங்கள் அல்லது விண்வெளித்தளம் அமைப்பது சாத்தியமாகும். தற்போதைய நிலையில் அதுகுறித்து ஏதும் உறுதியாக கூற முடியாது.” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!