நிலம் கையகப் படுத்த அரசாணை! – மோடி அரசு அதிரடி!
நிலம் கையக அவசரச சட்டத்துக்கு மாற்றாக 13 சட்டங்களை உள்ளடக்கிய அரசாணையை மத்திய அரசு நேற்று பிறப்பித்துள்ளது.இதன் மூலம் இனி நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருக்கது என்றாலும் எதிர்கட்சிகள் இவ்வாணையை எதிர்த்து போராட தயாராகி வருகிறது. .
முந்தைய நிலம் கையகச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு, நிலம் கையக சட்டத்திருத்த மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இதுதொடர்பாக மூன்று முறை அவசரச் சட்டங்களையும் பிறப்பித்தது. ஆனால், இந்த புதிய சட்டத்தில் விவசாயிகள் நலனுக்கு எதிராக சில ஷரத்துகள் இடம் பெற்றி ருப்பதாக காங்கிரஸ் கூறி வருகிறது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் இதுதொடர்பான சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை.
இந்தச் சூழலில், மத்திய அரசு மூன்றாவது முறையாக பிறப்பித்த நிலம் கையக அவசரச் சட்டமும் வரும் 31-ஆம் தேதியன்று காலாவதியாகவுள்ளது. நிலம் கையகப்படுத்துதலுக்கான சட்ட வரைமுறைகள் ஏதுமில்லாததால் அரசின் சில திட்டங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், நிலம் கையக அவசரச் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த 13 மத்திய சட்டங்களை உள்ளடக்கி ஓர் அரசாணையை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைச் சட்டம், ரயில்வே சட்டம், பாதுகாப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 13 சட்டங்கள் இந்த அரசாணையில் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இந்த 13 சட்டங்களுக்கு உள்பட்டு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நிலம் கையக அவசரச் சட்டத்தில் இடம்பெற்றிருந்தபடி இழப்பீடு வழங்க வழிபிறந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.