ஏடிஎம்-களில் பணம் எடுக்க கட்டுபாடு! – ஹைகோர்ட் நோட்டீஸ்
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் இயந்திரங்கள் நாடு முழுக்க துவங்கப்பட்டதற்கு காரணமே பணம் எடுப்பதற்காக எல்லோரும் வங்கியைத் தேடி வரவேண்டியதில்லை. காரணம், வங்கியில் ஊழியர்கள் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை. இதனால் வாடிக்கையாளர்களின் நேரம் வீணாகிறது என்கிற மாதிரியான பல காரணங்களினால்தான்.கடந்த காலங்களில் வங்கி ஊழியர் களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத வங்கிகள் ஏடிஎம் இயந்திரங் களின் எண்ணிக்கையை மட்டும் போட்டிபோட்டுக்கொண்டு உயர்த்தியது. வங்கிக்கே வராதீர்கள். உங்களின் எல்லா வேலைகளையும் ஏடிஎம் இயந்திரம் மூலமே செய்து கொள்ளுங்கள் என்று எல்லா வங்கிகளும் சொன்னது. கேட்காமலே ஏடிஎம் கார்டு தந்துவிட்டு, புதிய தொழில்நுட்பத்துக்குப் பழக்கப்படுத்தியபின், இப்போது திடீரென ஐந்து முறைக்குமேல் எடுத்தால் கட்டணம் என்ற கட்டுபாடு விதித்தது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர், சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்: ”மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில், நாடு முழுவதும் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்க வேண்டுகோளை ஏற்று, வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் 1.11.2014 முதல் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 6 பெருநகரங்களில், பிற வங்கி ஏடிஎம்மில் கட்டணமின்றி பணம் எடுக்கும் எண்ணிக்கை மாதத்துக்கு 5ல் இருந்து 3ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் உள்ள பிற வங்கி ஏடிஎம்களில் கட்டணமின்றி 5 முறை பணம் எடுக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்களின் நலனை கவனத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.”என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதனை விசாரித்த நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர், ரிசர்வ் வங்கியின் முதன்மை தலைமை பொதுமேலாளர், இந்திய வங்கிகள் தலைமை நிர்வாகி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.