இந்து பெண்கள் விவாகரத்து செய்யலாம் : மறுமணம் செய்து கொள்ளலாம் – பாகிஸ்தானில் புதுச் சட்டம் அமல்
பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நலனுக்காக திருமணச் சட்டம் என்ற ஒன்று இல்லை. இதுவே பாகிஸ்தான் இந்துப் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகளுக்கு மூல காரணமாகும். சுதந்திர மடைந்து 72 ஆண்டுகளாகியும் அங்கு இந்து திருமணச் சட்டம் என்ற ஒன்றை அந்த நாட்டு அரசு இயற்றவே இல்லை.இந்துப் பெண்கள் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்யவும் முடியாத அவலமும் உள்ளது. திருமணத்தை பதிவு செய்ய முடியாத பெண்கள் அடையும் இன்னல் களுக்கு அளவே இல்லை. தங்களுக்கு திருமணமாகி விட்டதை அவர்களால் சட்டப் பூர்வமாக நிரூபிக்க முடியாது. மேலும் கணவரின் சொத்துக்களில் பங்கு பெற முடியாது. விவாகரத்துக்குப் பிறகு உரிய நிவாரணத்தையும் பெற முடியாத நிலைதான் உள்ளது.
இந்நிலையில் இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் விவாகரத்து பெறவும், விவாகரத்தான பெண்கள் மற்றும் கணவரை இழந்த விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கும் வகையில் இந்து திருமண சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர் நந்த்குமார் என்பவர் பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாண சட்டசபையில் மசோதா ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதையொட்டி திருமண பருவத்தை எட்டாத வயதுள்ள சிறுமிகளை திருமணம் செய்யவும் தடை விதிக்க கோரிய இந்த சட்டதிருத்தம் சிந்து மாகாண சட்டசபையில் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. கவர்னரின் கையொப்பத்துக்கு பிறகு கடந்த வாரம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
இந்த புதிய சட்டத்தின்படி திருமணமான இந்து மதத்தை சேர்ந்த ஆண், பெண் இருவரும் இனி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம். விவாகரத்தான பெண் மற்றும் அவரது குழந்தை களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.