உலகின் மிகப்பெரிய தியான மையம் – வாரணாசியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!- வீடியோ

உலகின் மிகப்பெரிய தியான மையம் – வாரணாசியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி!- வீடியோ

தியானம் எனப்படுவது எம் மனதை விருத்தி செய்து கொள்வதற்கான விசேடமானதொரு முறையாகும். ‘மனதை மேன்மைப்படுத்தவும் விருத்தி செய்துகொள்ளவும் முடியும்’ என முதன்முதலாக புத்த பகவானே உலகிற்கு கூறினார். புத்தபகவான் தன் உள்ளத்தை பரிபூரணமாக விருத்தி செய்து அதற்கான வழியை ஏனையோருக்கு மொழிந்தருளினார்.. தியானம் என்பது செயல் அல்ல, அது ஒரு நிலை. வாழ்க்கையே தியானநிலையில் இருக்கவேண்டும் என்பது தான் நம் நோக்கம்.

ஏதோ பத்து நிமிடங்களுக்கு கண்ணை மூடி அமர்வதைப் பற்றி நாம் பேசவில்லை. எதைச் செய்தாலும் தியான நிலையில் செய்வதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தன்மையையே நமது வாழ்வில் கொண்டுவர விரும்புகிறோம். அப்படி நடந்தால் ஆரோக்கியமாக இருப்பது, அமைதியாக இருப்பது, ஆனந்தமாய் இருப்பது என்பதெல்லாம் முயற்சியின்றி நடக்கும்.. தியானத்தின் தன்மை அப்படிப்பட்டது. ஒரு மனிதன் இப்படி இருந்தால் அவனது உடல், மன செயல்பாடுகள் ஒருமுகப்பட்டும் கூர்மையுடனும் இருக்கும். ஒரு மனிதர் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும் போது மட்டுமே அவரது புத்திசாலித்தனம் சிறந்த முறையில் செயல்படும்.

இந்நிலையில், பிரதமர் மோடி தன் சொந்த தொகுதியான வாரணாசியில் ‘ஸ்வர்வேத மகாமந்திர்’ என்ற தியான மையத்தை திறந்து வைத்தார்.

இந்த உலகின் மிகப்பெரிய தியான மையமான ஸ்வர்வேட் மஹாமந்திர் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:

’ஸ்வர்வேத மகாமந்திர்’ வாரணாசி நகர மையத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இது 3,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.

20,000 பேர் அமரும் வசதியும், அழகிய வடிவமைப்புடன் கூடிய 125 இதழ்கள் கொண்ட தாமரைக் குவிமாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சந்த் பிரவர் விக்யான் தேவ் மற்றும் சத்குரு ஆச்சார்யா ஸ்வந்தந்த்ரா தேவ் ஆகியோர் 2004 ஆம் ஆண்டு மகாமந்திரின் அடித்தளத்தை அமைத்துள்ளனர்.

 

இந்தக் கட்டிடத்திற்கு பதினைந்து பொறியாளர்கள் மற்றும் 600 தொழிலாளர்களின் உழைப்பு செலுத்தியுள்ளனர்.

கோவிலில் 101 நீரூற்றுகள் மற்றும் தேக்கு மரக் கதவுகள் மற்றும் கூரைகள் உள்ளன.

மகாமந்திர் என்று அழைக்கப்படும் ஏழு அடுக்கு மேற்கட்டுமானத்தின் சுவர்கள் ஸ்வர்வேதத்தின் வசனங்களைக் கொண்டுள்ளன.

சுவர்கள் இளஞ்சிவப்பு மணற்கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன,

மேலும் மூலிகை தாவரங்கள் நிறைந்த அழகிய தோட்டமும் உள்ளது.

விஹங்கம் யோகத்தை உருவாக்கியவரும் நித்திய யோகியுமான சத்குரு ஸ்ரீ சதாஃபல் தியோஜி மஹாரா எழுதிய ஆன்மீக இலக்கியமான ஸ்வார்வ்வின் நினைவாக இந்த ஆலயம் பெயரிடப்பட்டது.

இந்த ஆலயம் ஸ்வர்வேத போதனைகளை பிரச்சாரம் செய்கிறது, பிரம்ம வித்யாவை மையமாகக் கொண்டு, அதாவது ஆன்மீகத்தின் ஜென் நிலையைத் தேடுபவர்களுக்கான இடமாகும்.

இந்த தியான மையம் ஆன்மீகம் மற்றும் உலக அமைதியை நிலைநாட்டும் இடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்படியாப்பட்ட மையதிறப்பு விழாவை தொடர்ந்து, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி தியான மையத்தை சுற்றி பார்த்தார்.

பின்னர் அந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியது:-

ஒரு காலத்தில் நாம் அடிமை மன நிலையில் இருந்தோம். தற்போது காலச் சக்கரம் மாறிவிட்டது. அந்த மன நிலையில் இருந்து மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது. அடிமைத்துவ காலத்தில் இந்தியாவை பலவீனப்படுத்த முயன்ற கொடுங்கோலர்கள் முதலில் நமது கலாச்சார சின்னங்களைத்தான் குறிவைத்து அழித்தனர். எனவே, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் பழைய கலாச்சார சின்னங்களை மீட்டெடுப்பதுடன், அவற்றை மறுகட்டமைப்பு செய்து புதுப் பொலிவேற்ற வேண்டியது தற்போது நமது தலையாய கடமையாக மாறியுள்ளது.

காசி விஸ்வநாதர் ஆலயம் இந்தியாவின் அழியாத பெருமைக்கு எடுத்துக்காட்டு . அதேபோன்று மகாகாள் மஹாலோக் நமது அழியாத தன்மைக்கு சான்று. கேதார்நாத் ஆலயம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

காசி என்று அழைக்கப்படும் வாராணசி (பிரதமரின் நாடாளுமன்ற தொகுதி) இந்தியாவின் கலையை வடிவமைத்து நினைத்துப்பார்க்க முடியாத உயரத்துக்கு கொண்டு சென்ற நகரமாகும். இங்கிருந்து அறிவு மற்றும் ஆராய்ச்சிக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டன. இங்கிருந்துதான் மனித விழுமியங்கள் குறித்த தொடர்ச்சியான விழிப்புணர்வு அகில உலகத்துக்கும் சென்றுசேர்ந்தது என்பது பெருமிதத்துக்குரியது.

9 தீர்மானங்களை பின்பற்ற வேண்டும்

மக்கள் 9 தீர்மானங்களை பின்பற்ற வேண்டும். முதலாவது ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும். நீர்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். இரண்டாவது, கிராமங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவது உங்கள் கிராமம், உங்கள் பகுதி, உங்கள் நகரத்தை சுத்தமாக பராமரிக்க உறுதியேற்க வேண்டும். நான்காவது, உள்ளூர் தயாரிப்பு பொருட்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். ஐந்தாவது, முடிந்த வரை சொந்த நாட்டை சுற்றிப் பாருங்கள், இதைசெய்யும் வரை நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது. பெரிய பணக்காரர்கள் வெளிநாடுகளில்திருமணம் செய்வதை தவிர்த்து, இந்தியாவில் திருமணங்களை நடத்த முன்வர வேண்டும். ஆறாவது, இயற்கை விவசாயம் குறித்து நமது விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பூமித்தாயை காப்பாற்றுவதற்கான முக்கியமான பிரச்சாரம் அது. ஏழாவது, உணவில் சிறுதானிய வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அது, உடல் மற்றும் மனவலிமை பெற பேருதவி புரியும். எட்டாவது உடற் தகுதியைப் பெற யோகா அல்லது ஏதேனும் விளையாட்டை உங்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றுங்கள். எனது இறுதியான மற்றும் ஒன்பதாவது கோரிக்கை என்பது குறைந்தபட்சம் ஒரு ஏழைக் குடும்பத்துக்காவது உதவுங்கள். இந்தியாவில் இருந்து வறுமையை அகற்ற இதனை மக்கள் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.- இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

error: Content is protected !!