வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள்.- சுப்ரீம் கோர்ட் சுளீர்

வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள்.- சுப்ரீம் கோர்ட் சுளீர்

‘கணவர் வெளியே சென்று வருமானம் ஈட்டுபவராகவும், மனைவி வீட்டிலிருந்து இதரக் குடும்பக் கடமைகளை பார்த்துக்கொள்வதுமே பரவலாக இருக்கிறது. மனைவி வீட்டில் இருக்கிறார் என்பதற்காக அவர் உழைக்கவில்லை, பணி செய்யவில்லை என்று கூற முடியாது. கணவர் 8 மணி நேரம் பணி செய்கிறார் என்றால், வீட்டில் 24 மணி நேரமும் ஒரு குடும்பத்தலைவிக்கு பணிகள் காத்திருக்கிறது. வீட்டினை மனைவி பொறுப்பாக கவனிப்பதால் மட்டுமே, கணவரால் நிம்மதியாக வெளியே சென்று பொருளீட்ட முடிகிறது. வீட்டில் மனைவி செய்யும் கடமைகளுக்கு ஊதியம் இல்லை என்பதற்காக, அவரது பணிகளை குறைத்து மதிப்பிட முடியாது. எனவே, கணவன் ஈட்டும் வருமானத்திலும் அதைக்கொண்டு வாங்கப்படும் சொத்துக்களிலும் மனைவிக்கும் உரிமை உண்டு” என்றெல்லாம் முன்னரே தீர்ப்பு சொல்லி இருந்த சுப்ரீம் கோர்ட் தற்போதும் கூட ‘சம்பாதிக்கும் பெண்ணைவிட குடும்பத் தலைவியாக வீட்டில் கடமையாற்றும் இல்லத்தரசியின் பணி எந்த வகையிலும் குறைந்தததல்ல’ என வழக்கு ஒன்றின் தீர்ப்பில் விளக்கி உள்ளது.

உத்தரகண்டைச் சேர்ந்த ஒரு பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார். இழப்பீடு கேட்டு அவருடைய கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, மோட்டார் வாகன சட்டத் தீர்ப்பாயம், இந்தப் பெண், குடும்பத் தலைவியாக உள்ளதால், தினசரி கூலி வேலை செய்வோர் ஈட்டும் வருவாயைவிட குறைந்த தொகையை இழப்பீடாக அறிவித்தது.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், அதை உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு `சம்பாதிக்கும் பெண் – வீட்டிலிருந்தபடி குடும்பக் கடமைகளை ஆற்றும் இல்லத்தரசி ஆகியோருக்கு இடையே பேதம் பார்ப்பது தனி மனிதர் முதல் சமுதாயம் வரை தொடரவே செய்கிறது. வெளியில் சென்று சம்பாதிக்கும் பெண் அவரது வருமானத்தால் அளவிடப்படுவதும், வீடுகளில் கடமையாற்றும் பெண்களை அந்த வகையில் நிர்க்கதியாக்குவதும் தொடர்கிறது. சமுதாயத்தின் இந்த கேடான மனநிலையை மாற்றும் நோக்கிலும், இல்லத்தரசிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மகளிர் உரிமைத் தொகை என்ற முன்னோடி திட்டத்தை தமிழகம் தொடங்கி பல்வேறு மாநிலங்கள், வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தி வருகின்றன.

நிதர்சனத்தில், வீட்டிலிருந்து குடும்பக் கடமைகளை ஆற்றும் மகளிர் எந்த வகையிலும் குறைவானவர்கள் இல்லை என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த வரிசையில் மற்றுமொரு தீர்ப்புகளை நினைவூட்டி இருக்கும் சுப்ரீம் கோர்ட் ‘சம்பாதிக்கும் பெண்ணைவிட குடும்பத் தலைவி பணி எந்த வகையிலும் குறைந்ததல்ல’ என மீண்டும் பிற்போக்கு மனப்போக்கிற்கு குட்டு வைத்துள்ளது.

வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள். அவர்களது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது; அதை பணத்தால் மதிப்பிடவும் முடியாது.வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல. அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டை ரூ.6 லட்சமாக வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

error: Content is protected !!