ஜெயிலர் படம் வரும் மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூண்!
வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்பிரியா, நடிகர் முரளி ராதாகிருஷ்ணன், அனன்யா மணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கிறிஸ்டோபர் ஜோசப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, சுதர்ஷன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக கே.எஸ்கே செல்வா பொறுப்பேற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், தனஞ்செயன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், சுப்பிரமணிய சிவா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அனைவரையும் வரவேற்றுறை தயாரிப்பாளர் முனிவேலன் பேசும்போது, “சமூகத்திற்கு ஒரு நல்ல ஒரு மெசேஜ் சொல்லும் படமாக இது உருவாகியுள்ளது. இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோள்களை வைக்கிறேன். படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் கட்டாயம் படத்தின் புரமோசனுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அப்படி தராத நடிகர்கள் மீது தடை விதிக்க வேண்டும். ஓடிடி வியாபாரத்தை ஒழுங்குபடுத்தி தரவேண்டும். மேலும் பைரசியை தடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நடிகை சுபப்பிரியா பேசும்போது, “ஒரு படத்தில் ஒரு நடிகை இருந்தாலே சமாளிப்பது கஷ்டம். இந்தப்படத்தில் 5 பேர் இருந்தாலும் படப்பிடிப்பின்போது பெண்களுக்கான பாதுகாப்பு, தங்கும் வசதி, சாப்பாடு என எல்லாவற்றிலும் எங்களை நல்ல விதமாக பார்த்துக் கொண்டனர். யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாத இயக்குனர் ஹாரூன் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு பேச்சுக்கும் கவுன்ட்டர் கொடுத்து ஜாலியாக படப்பிடிப்பை நடத்தினார். கதாநாயகன் நட்டியும் எப்பொழுதும் ரஜினி பாடலை உற்சாகமாக பாடிக்கொண்டு அனைவரையும் கலகலப்பாக வைத்திருந்தார்.” என்று கூறினார்.
நடிகர் முரளி ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘சமூகத்திற்கு தேவையான ஒரு விஷயத்தை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் கோயம்பேட்டில் மிகப்பெரிய வியாபாரி என்பதால் கோயம்பேடு மார்க்கெட் ஆட்கள் பார்த்தாலே இந்த படம் ஹிட் ஆகிவிடும். நடிகர் நட்டி எந்தவித பந்தாவும் காட்டாதவர். அவரை மாதிரி இருக்க நானும் முயற்சி செய்வேன். படத்தின் ஒளிப்பதிவாளர் கிறிஸ்டோபர் ஜோசப் ஹீரோயின்களுக்கு மத்தியில் எங்களையும் அழகாக காட்டியுள்ளார்” என்றார்.
நடிகை சாஷ்வி பாலா பேசும்போது, “ஒரு படத்தின் பிரமோசனுக்கு அதில் நடித்த அனைவருமே கட்டாயம் வந்து கலந்து கொள்ள வேண்டும். இயக்குனர் ஹாரூண் எல்லா காட்சிகளையும் எனக்கு நடித்துக் காட்டினார். படத்தில் நட்டியுடன் நடிக்கும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்கிற ஆர்வத்தில் இருந்தேன். என்னை போன்ற இலங்கை தமிழ் கலைஞர்களுக்கு தமிழ் சினிமா தொடர்ந்து வாய்ப்புகள் தந்து ஆதரிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நடிகர் நட்டி பேசும்போது, “எங்களுக்கு சம்பளத்துடன் ஜிஎஸ்டியும் சேர்த்து கொடுத்த தயாரிப்பாளர்களில் வெப் படத்தின் தயாரிப்பாளரும் ஒருவர். இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றாவிட்டாலும் அவர் முதல் காட்சியை எடுக்கும் போதே அவர் வேலை தெரிந்தவர் தான் என்பது தெரிந்து விட்டது. இப்போதைய சூழலில் பல பேர் தங்களது மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அவை ஆபத்து நிறைந்த ஒன்வே டிராபிக் என்பது பற்றி விளக்கும் படம் தான் இந்த வெப்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “நடிகர் நடிகைகள் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் அது வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட வேலைகளை ரத்து செய்துவிட்டு அவர்கள் வருவதற்கு சிரமமாக கூட இருக்கலாம். அதனால் தங்கள் விழா பற்றி முறையான அறிவிப்பை முன்கூட்டியே படக்குழுவினர் அவர்களுக்கு தெரிவித்து விட்டால் அவர்களுக்கும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். படம் நல்ல படமாக இருந்தால் நிச்சயமாக இப்போது ஒதுங்கிப்போனவர்கள் எல்லாம், நாளை சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல், ஓடிபி என வியாபாரம் பேச தேடி வருவார்கள். சினிமா தயாரிக்க வருபவர்கள் கனத்த இதயத்துடன் தான் வர வேண்டும் தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு உறுதுணையாக உதவியாக இருக்குமே தவிர அவர்களின் வியாபார விஷயங்களில் நிச்சயமாக பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை படம் தோல்வி அடைந்தாலும் வருத்தப்படக்கூடாது. தவறுகளை எப்படி களைவது என அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதை சரி செய்ய வேண்டும். நடிகர் நட்டி அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடிக்க இருக்கிறார். வரும் நாட்களில் அவர் உலக அளவில் பேசப்படுவார்” என்று கூறினார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பேசும்போது, “நான் தமிழுக்கு அடிமை. ஹீரோயின்கள் அழகாக தமிழ் பேசியதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. நட்டியுடன் அவர் அறிமுகமான நாளை உட்பட 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன் இயக்குனர் மிஷ்கின் போல ஒரு சிலர்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு வாங்குவதை சரியாக தெரிந்து வைத்து இருப்பார்கள் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் ஹாரூணும் ஒருவர்” என்றார் .
இயக்குனர் ஹாரூண் பேசும்போது, “நல்ல படைப்புகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. பெரும்பாலும் ஒரு கட்டடம் அழகாக தெரிவதைத்தான் பார்ப்பார்கள். ஆனால் அதன் அடித்தளம் யாருக்கும் தெரியாது. அதுபோலத் தான் தயாரிப்பாளர்களும்.. கார்த்திக் ராஜாவிடம் இந்த படத்தின் கதை பற்றி கூறிய போது, அப்பா (இளையராஜா) சைக்கோ படத்திற்கு ஒரு விதமாக பண்ணினார். நான் இதில் ஒரு புது மாதிரியாக முயற்சிக்கிறேன் என்று ஊக்கமளித்தார். நடிகர் நட்டி புது இயக்குனர் என நினைக்காமல் 100% எங்களை நம்பினார். இந்த படத்தின் கதாநாயகிகள் தங்களுக்குள் ஆடை சம்பந்தமாக எந்த பிரச்சினையும் வரவில்லை என்று சொன்னார்கள்.. அதற்கு காரணம் இரண்டு பாடல்களைத் தவிர கிளைமாக்ஸ் வரை அனைவருக்கும் ஒரே காஸ்டியூம் தான். ஜெயிலர் திரைப்படம் வரும் அதே மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி” என்றார்.