விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை அறிக்கை!

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை – மருத்துவமனை அறிக்கை!

டிகர்களின் கேப்டனும், தே.மு.தி.க நிறுவனருமான விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை எனவும், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதால் 14 நாள்கள் தொடர் சிகிச்சை வேண்டுமெனவும் மருத்துவ அறிக்கை வெளியாகியிருப்பது பல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 2018 ஆம் ஆண்டு கூட அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது கல்லீரல் பிரச்சினைக்கும் தைராய்டு பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு, அவ்வப்போது மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுவந்தார் விஜயகாந்த், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீரிழிவு நோய் காரணமாக கால் விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் அறிவுரைபடி விரல்கள் அகற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நவம்பர் 18-ம் தேதியன்று காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் (MIOT) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்தத் தகவல் முற்றிலும் பொய்யானது என மறுத்தனர். . தே.மு.தி.க தரப்பிலும், `ஓரிரு நாள்களில் வீட்டுக்குத் திரும்புவார்’ என்றும், `வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 23-ம் தேதியன்று, `விஜயகாந்த்தின் உடல்நிலை சீராகவும், உடல் செயல்பாடுகள் நிலையாகவும் இருக்கின்றன. இன்னும் சில நாள்கள் கண்காணிப்புக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பி வழக்கமான நடவடிக்கையை அவர் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என மியாட் மருத்துவமனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மியாட் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல்  தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்களிடையே மட்டுமின்றி பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!