மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு-நான்கு பேருக்கு கூடுதல் பொறுப்பு!

ண்மையில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோர் போட்டியிட்டு வென்றனர். அதனைத் தொடர்ந்து தங்களது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதி இருந்தனர்.இதனையடுத்து நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நான்கு மத்திய அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, தற்போதுள்ள இலாகாவைத் தவிர, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார்.

இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் ஏற்கெனவே கவனித்துவரும் இலாகாக்களுடன் கூடுதலாக ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சராகும் செயல்பட உள்ளார். இணை அமைச்சரான டாக்டர். பார்தி பிரவின் பவார், பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பொறுப்பையும் சேர்ந்து கவனிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண் துறையும் கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பிரஹலாத் படேல் உள்ளிட்ட 12 பாஜக எம்.பி.க்களில் பத்து பேர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.இவர்கள் கவனித்துவந்த இலாகாக்கள் பிறருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், ராஜினாமா செய்துள்ள இவர்களில் பலரும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!