துப்பாக்கி முனையில் திருமணம் – பாகிஸ்தானிலுள்ள இந்திய தூதரகத்தில் பெண் புகார்
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் கட்டாய திருமணம் செய்தவரை தண்டிக்க வேண்டும். தன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பெண் துாதரக அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்திய தலைநகர் டெல்லியை சேர்ந்தவர் உஸ்மா (வயது 20). இவர் மலேசியா சென்று இருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த தாஹிர் அலி என்பவரை சந்தித்த போது..இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் டெல்லி திரும்பிய உஸ்மாவை உடனடியால பாகிஸ்தானுக்கு வரும்படி தாகிர்கான் தெரிவித்தார். உஸ்மாவும் பாகிஸ்தான் சென்றார். வாகா எல்லைப்பகுதிக்கு சென்றதும், அங்கு தாகிர்கான் காரில் தயாராக இருந்தார். உஸ்மாவை காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். சிறிது துாரம் உஸ்மாவுக்கு, தாகிர்கான் மயக்க மருந்து கொடுத்தார். இதில் உஸ்மா மயங்கி விட்டார்.
மறுநாள் காலையில் எழுந்த போது உஸ்மா, தாகிர்கான் வீட்டின் படுக்கையில் கிடந்தார். சுயநினைவு வந்ததும் வீட்டில் உள்ளவர்களிடம் பேசினார். அவர்களுக்கு இந்தி தெரியவில்லை. அன்றைய தினம் இரவு தாகிர்கான், உஸ்மாவுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தார். மறுநாள் காலையில் துப்பாக்கி முனையில் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்படி உஸ்மாவை, தாகிர்கான் மிரட்டினார். வேறு வழி இல்லாததால் அவரும் அப்படியே செய்தார்.
பின்னர் தாகிர்கானுக்கு சொந்தமான வீட்டில் உஸ்மா அடைக்கப்பட்டார். அப்போதுதான் தாகிர்கானுக்கு ஏற்கனவே திருமணமாகி, நான்கு குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அங்கிருந்து அவர் தப்பித்து இந்திய துாதரக அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதன் மூலம் கோர்ட்டில் உஸ்மாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. வரும் ஜூலை 11ம் தேதிக்கு வழக்கை கோர்ட் ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே தன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் வரை, இந்திய துாதரக அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். அங்கேயே தஞ்சமமும் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இந்திய துாதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்