கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு! -இந்திய சர்வே அமைப்பு புகார் எதிரொலி
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும், இணைய சேவை மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை வழங்கும் கூகுள் நிறுவனம், 2013ல், ஒரு வரைபட போட்டியை ஏற்பாடு செய்தது.இந்த போட்டியில் பங்கேற்பவர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகள், ஓட்டல்கள் குறித்த வரைபடங்களை வெளியிடலாம் என, அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது.ஆனால், இதற்கான முறையான அனுமதியை, நாட்டின் வரைபடம் தொடர்பான விவகாரங்களை கையாளும், ‘சர்வே ஆப் இந்தியா’விடம் பெறவில்லை என்றும், வரைபடங்களில் தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் புகார் எழுந்தது.குறிப்பாக, நாட்டின் முக்கியமான சில பகுதிகள், இந்திய வரைபடத்தில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய எல்லைகளை தவறாக சித்தரித்ததாக இந்திய நில அளவை நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டம், தாலன்வாலா காவல்நிலைய பொறுப்பாளர் அனில் குமார் ஜோஷி,
இந்தியாவின் சர்வதேச எல்லைகளை கூகுள் மேப்ஸ் தவறாக சித்தரித்திருப்பதாகவும், இதுபற்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய நில அளவை நிறுவனம் கடந்த 13-ம் தேதி புகார் அளித்தது. அதன் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் கூகுள் மேப்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.”என்று அவர் கூறினார்.
நாட்டின் தேசிய சர்வே மற்றும் மேப்பிங் அமைப்பான இந்திய நில அளவை நிறுவனமானது, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வருவதுக் குறிப்பிடத்தக்கது. .