அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு ‘சீட்’: – முதல்வர் பழனிசாமி வழங்கினார்!

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு ‘சீட்’: – முதல்வர் பழனிசாமி வழங்கினார்!

தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின் படி இன்று மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் வழங்கினார். தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக 3,032 எம்பிபிஎஸ் இடங்களும், 165 பிடிஎஸ் இடங்களும் உள்ளன. இதைத் தவிர 15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,147 எம்பிபிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 953 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 1,065 பிடிஎஸ் இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 695 பிடிஎஸ் இடங்களும் இருக்கின்றன.

நிகழாண்டில் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 23,707 பேரின் விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,276 பேரின் விண்ணப் பங்களும் ஏற்கப்பட்டன. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 951 பேர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மருத்துவ கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களை முதலமைச்சர் நேரில் பாராட்டி மருத்துவ படிப்புக்கான உபகரணங்களை வழங்கினார்.

கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 6 மாணவர்களுக்கு மட்டும் தான் மருத்துவ படிப்பு படிக்க ‘சீட்’ கிடைத்தது. இன்று எம்.பி.பி.எஸ். படிக்க 313 சீட்களும், பல் மருத்துவ கல்லூரியில் சேர 92 இடங்களும் என மொத்தம் 405 ‘சீட்’கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார்.

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. ஒரு நாளைக்கு 500 பேர் கலந்தாய்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் நாள் என்பதால் 300 பேர் மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. பிரசித்தி பெற்ற அரசு மருத்துவ கல்லூரிகளான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்டான்லி மருத்துவ கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்திருந்தனர்.

இதில் 10 மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேர்க்கை ஆணைகளை வழங்கி ஏழை எளிய மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். அந்த மாணவ மாணவிகள் ஆனந்த கண்ணீருடன் முதலமைச்சருக்கு தங்களது நன்றியை தெரிவித்தார்கள்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது, “அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவராகும் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது. அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த நாள் எனது வாழ்வில் மகிழ்ச்சிகரமான நாள். தமிழக வரலாற்றில் இந்த நாள் பொன்னாள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு நன்னாள். நான் அரசு பள்ளியில் படித்தவன். எனக்கு மிக மனநிறைவு ஏற்படுத்தும் நாள் இது. ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்ந்து மகிழ்ச்சி தரும் திருநாள். அம்மாவும் நானும் நீட் தேர்வு கூடாது என பலமுறை பிரதமரை சந்தித்த போதும் கடிதம் மூலமும் வலியுறுத்தி வந்தோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கேட்டோம். சட்ட போராட்டம் நடத்தினோம். ஆனால் உச்சநீதிமன்ற ஆணைப்படி இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வு வந்தபின் 3 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வது குறைந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திறமையானவர்களாக இருந்த போதிலும் நீட் தேர்வை எதிர்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு மிக குறைவாக இருந்தது. அவர்களால் அதிக மதிப்பெண் பெற முடியவில்லை.

+2 படித்த மாணவர்கள் 8 லட்சத்து 41 ஆயிரத்து 259 பேர். இதில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 பேர் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள். அதாவது 41 சதவிகிதம் பேர். கடந்த ஆண்டு 6 அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தான் மருத்துவ கல்லூரிகளில் சேரும் நிலை இருந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று நான் உறுதி கொண்டேன். எனவே அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டை கொண்டு வந்தேன். ஏழை எளிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு அளிக்க அவர்களது மருத்துவ கனவு நனவாக இந்த உள்ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தேன்.

உங்களது குடும்பம் எப்படி அடையாளப்படுத்தப்பட்டது என்பது தெரியும். இனி உங்களது குடும்பத்தை மருத்துவ குடும்பம் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் 26 அரசு மருத்துவ கல்லூரிகளும், 15 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. அம்மா இருந்த போது 1945 மருத்துவ சீட் தான் இருந்தது. 2017–ல் இது 3 ஆயிரத்து 6 ஆக உயர்ந்தது, இன்று 3 ஆயிரத்து 50 ஆக உயர்ந்துள்ளது.

அம்மாவின் ஆட்சியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் துவங்கி இருக்கிறோம். இதன் மூலம் 1550 புதிய மருத்துவ சீட்கள் உருவாக்கப்படும். 2021–22 ஆண்டிலிருந்து புதிதாக 1550 சீட்கள் உருவாக்கப்படும். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 1990 மருத்துவ சீட்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேருக்கு எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்க இருக்கிறது. அதேபோன்று பி.டி.எஸ். படிப்பில் 92 இடங்கள் கிடைக்கும். மொத்தத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்கும்.”இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

error: Content is protected !!