“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு தமிழ்நாடுதான் தந்தை வீடு” – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு தமிழ்நாடுதான் தந்தை வீடு” – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் வி.பி.சிங் சிலை புதிததாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் துணைவியார் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடந்த சிலை திறப்பு விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தமிழக அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவச் சிலை கம்பீரமாக அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதை அடுத்து பின் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு தாய் வீடு உத்தரப்பிரதேசம் என்றால், தமிழ்நாடு தான் தந்தை வீடு. தந்தை பெரியார் பெயரை உச்சரிக்காமல் வி.பி.சிங்கின் பேச்சே இருக்காது. தந்தை பெரியாரின் சமூக நீதி மண்ணில் வி.பி.சிங்கிற்கு முதன் முதலாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் வாழ்வு மற்றும் வரலாறு குறித்து இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். 11 மாதமே பிரதமராக இருந்தாலும், அவர் செய்த சாதனைகள் மகத்தானது. வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல, ஏழையும் இல்ல. ஆனாலும் பிற்படுத்தப்பட்ட ஏழை சமூகத்திற்காக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி காண்பித்தார்.

சமூகநீதி பயணத்தில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம். எங்கெல்லாம் புறக்கணிப்பு, தீண்டாமை, அநீதி உள்ளதோ அதை தீர்க்க வேண்டிய மருந்துதான் சமூகநீதி. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிகள் வேறுபடலாம், ஆனால், பிரச்சனைகள் ஒன்று தான். இட ஒதுக்கீடு முறையாக வழங்க வேண்டும். இதை கண்காணிக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அமைக்க வேண்டும்.

இதனிடையே நானும் வி.பி.சிங்கும், இரண்டு முறை சந்தித்துள்ளோம். முதல் சந்திப்பு 1988 ஆம் ஆண்டு தேசிய முன்னணியில் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது இளைஞரணி சார்பில் எனது தலைமையில் மாபெரும் ஊர்வலத்தை தலைமை தாங்கி வந்தேன். கிட்டத்தட்ட 2 லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை அண்ணா சாலையில் உள்ள காயித்தே மில்லத் கல்லூரி அருகில் அமைத்திருந்த மேடையில் மாலை தொடங்கி இரவு வரை ஊர்வலத்தை பார்த்து வியந்து பாராட்டினார். அப்போது வி.பி.சிங்கிடம் எனக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வி.பி.சிங் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. தமிழ்நாடு என்றும் அவரை மறக்காது, மறக்காது’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!