இலங்கை அதிபர் ராஜபக்சே – சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்தில் தஞ்சம்!

இலங்கையில் மக்கள் கிளர்ச்சி வெடித்ததையடுத்து, சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்தபடியே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் ஏறத்தாழ ஒரு மாதம் காலம் கோத்தபய ராஜபக்சே தங்கியிருந்தார். இந்த நிலையில், சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில், அங்கிருந்து தாய்லாந்து புறப்பட்டுள்ளார். கோத்தபய ராஜபக்சேவுக்கு தாய்லாந்து வருவதில் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் தாய்லாந்து நோக்கி பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கோத்தயபய ராஜபக்சவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது. அத்துடன், இராஜதந்திர கடவூச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர் ஒருவருக்கு தாய்லாந்தில் விசா இன்றி 90 நாட்கள் தங்கியிருக்க முடியும். இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் 2013ம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இதன்படி, கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் எதிர்வரும் சில மாதங்களுக்குத் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமது சொத்துக்களை தாய்லாந்தில் முதலீடு செய்யும்பட்சத்தில், தாய்லாந்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக தங்கியிருக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.