கோவளம் டூ திருவிடந்தை ஹெலிகாப்டர் ட்ராவல் செய்ய தயாரா? – 10 நிமிட பயணத்துக்கு ₹5 ஆயிரம் கட்டணம்!.

கோவளம் டூ  திருவிடந்தை ஹெலிகாப்டர் ட்ராவல் செய்ய தயாரா? – 10 நிமிட பயணத்துக்கு ₹5 ஆயிரம் கட்டணம்!.

மிழ்நாட்டில் பொதுமக்கள் பயணத்திற்கு என்று பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கிராம மற்றும் நகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அமைக்கப்படவுள்ளது என்று ஸ்டாலின் அரசு தெரிவித்திருந்த நிலையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வரையிலான ஹெலிகாப்டர் சுற்றுலாவை தனியார் பங்களிப்புடன் நடத்துவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெற்று கோவளத்தில் ஹெலி பேட் அமைக்கப்பட்டது.

இதனிடையே சென்னை விமான நிலைய இயக்குனரின் ஒப்புதல் காரணமாக இப்பணிகள் தாமதமாகி வந்தன. இந்நிலையில் தற்போது விமான நிலைய இயக்குனரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்று தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சேவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது. இருப்பினும் தற்போதுள்ள சூழ்நிலையில் மாமல்லபுரம் வரை பறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. முதற்கட்டமாக கோவளத்தில் இருந்து முட்டுக்காடு படகுத்துறை, கேளம்பாக்கம், திருவிடந்தை ஆகியவற்றைச் சுற்றி மீண்டும் கோவளத்திற்கு வந்து இறங்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தனியார் நிறுவனத்தின் சார்பில் நேற்று முன்தினம் இதற்கான முதற்கட்ட பயணம் தொடங்கியது. ஆன்லைன் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆர்வமுள்ள பயணிகள் அட்வான்ஸ் புக்கிங் செய்திருந்தனர். அவர்கள் காலை 11 மணியில் இருந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் ஒரு பயணிக்கு கட்டணமாக ₹5,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 நிமிடம் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் நாளிலேயே சுமார் 20 நடைகள் ஹெலிகாப்டர் பயணம் இயக்கப்பட்டது.

இன்று தீபாவளி பண்டிகை என்பதால் ஏராளமானோர் பட்டாசு மற்றும் ராக்கெட் வெடிப்பார்கள் என்பதால் ஹெலிகாப்டர் சுற்றுலா இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (13ம் தேதி) முதல் 15ம் தேதி வரை இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும் என தனியார் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!