பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்திற்கு வெளியே, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு, ஆர்சிபி நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “ஜூன் 4, 2025 அன்று எங்கள் இதயங்கள் உடைந்தன. ஆர்சிபி குடும்பத்தைச் சேர்ந்த பதினொரு பேரை நாங்கள் இழந்தோம். அவர்கள் எங்களில் ஒரு பகுதியாக இருந்தனர். எங்கள் நகரம், எங்கள் சமூகம் மற்றும் எங்கள் அணியை தனித்துவமாக்குவதில் ஒரு பகுதி. அவர்கள் இல்லாதது எங்கள் ஒவ்வொருவரின் நினைவுகளிலும் எதிரொலிக்கும். அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை எந்தளவாலும் ஒருபோதும் நிரப்ப முடியாது. ஆனால் முதல் படியாகவும், மிகுந்த மரியாதையுடனும், ஆர்சிபி அவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளது .

சம்பவம்:
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடும் வகையில், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே குவிந்தனர். கட்டுப்பாட்டை மீறிய கூட்டத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிவாரண உதவிகள்:
இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, கர்நாடக அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி அறிவித்தது. கர்நாடகா கிரிக்கெட் சங்கமும் தலா ₹5 லட்சம் நிதியுதவி வழங்கியது.
சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஆர்சிபி அணி நிர்வாகம் தனது ‘RCB Cares’ திட்டத்தின் கீழ், உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு, சமூக வலைத்தளங்களில் பரவி, பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த கூட்ட நெரிசலுக்கு, ஆர்சிபி நிர்வாகம் உரிய அனுமதிகளைப் பெறாமல் மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் கொண்டாட்டத்தை நடத்தியதே காரணம் என்று கர்நாடக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

