வயநாடு வந்த ராகுல்: யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!

வயநாடு வந்த ராகுல்:  யானை தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்!

ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி விட்டு, தன் சொந்த தொகுதியான வயநாட்டிற்கு விரைந்தார். அங்கு வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஒவ்வொருவர் வீட்டுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது சில இடங்களில் ராகுல் காந்தியின் வாகனத்தை நிறுத்தி, பொதுமக்கள் தங்களது புகார்களை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் உள்ள புல்பள்ளியில், வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த வி.பி.பால் என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். கடந்த 10 நாட்களில் இது இரண்டாது உயிரிழப்பு என்பதால், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புலி மற்றும் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், புல்பள்ளியில் வனத்துறை தற்காலிக ஊழியர் பால், யானை தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு, காவல் துறையினர் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது. பின்னர், உயிரிழந்தவரின் மனைவிக்கு தற்காலிக வேலையும், அவரின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக கேரள அரசு அறிவித்தது. அத்துடன், குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்தது. இதையடுத்தது உடலை பெற்றுக்கொண்டு போராட்டம் கைவிடப்பட்டது.

இருந்த போதும், மனித – மிருக மோதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி வயநாடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதன் காரணமாக புல்பள்ளியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.-யுமான ராகுல் காந்தி, அவசரமாக வாரணாசியில் இருந்து வயநாடு சென்றார். பின்னர், உயிரிழந்த வி.பி.பால் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது சில இடங்களில் ராகுல் காந்தியின் வாகனத்தை மறித்த பொதுமக்கள் தங்களது குமுறலை கண்ணீருடன் கொட்டினர். இதனால் அங்கு பரபரப்பும் நிலவியது.

error: Content is protected !!