பிரக்ஞானந்தா தேசிய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்!

பிரக்ஞானந்தா தேசிய செஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம்!

நெதர்லாந்தில் நடந்து வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் பிரக்ஞானந்தாவின் வெற்றி தனிப்பட்ட மைல்கல்லாக மட்டுமல்லாமல், இந்திய சதுரங்கத்தில் ஒரு புதிய சகாப்தத்தையும் குறிக்கிறது. தன்னை விட கிட்டத்தட்ட 200 புள்ளிகள் அதிகம் பெற்று உலக தரவரிசையில் கோலோச்சும் வலுவான டிங்கை விழ்த்தியதன் மூலம், தனது அபாரமான திறமை என்ன என்பதை பிரக்ஞானந்தா மீண்டும் உலகிற்கு காட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆனந்த் போன்ற சதுரங்க ஜாம்பவான்களுடன் பிரக்ஞானந்தா தனது பெயரை நம்பர் ஒன் வீரராக பொறித்துள்ளார். அதன்படி, விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு நடப்பு உலக செஸ் சாம்பியனை தோற்கடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்று இந்திய தரவரிசையில் முதலிடத்தை பிடித்தார்.

நம் நாட்டில் செஸ் போட்டிகள் என்றாலே தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவார். செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அவர் பல ஆண்டுகளாக இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து வருகிறார். குறிப்பாக 2000, 2007, 2008, 2010 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருமுறை கைப்பற்றியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஒருவரான விஸ்வநாதன் ஆனந்த் செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.அவருக்கு அடுத்ததாக நாடு முழுவதும் பல வீரர்கள் செஸ்சில் வென்றாலும், விஸ்வநாதன் ஆனந்த்தை நெருங்க முடியவில்லை. கடந்தாண்டு 17 வயதான செஸ் வீரர் குகேஷ் முதலிடத்திற்கு வந்தாலும், நீடிக்கவில்லை.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கவனிக்கப்படும் வீரராக முன்னேறி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா, கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றதோடு, பல சரித்திரமும் படைத்துள்ளார். 2023ம் ஆண்டில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டிய உலகின் இளைய செஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதி போட்டியை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அதேபோல், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.

இதன் அடுத்தக் கட்டமாக, நெதர்லாந்தில் நடந்துவரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரின் 4வது சுற்றில் பிரக்ஞானந்தா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் டிங் லிரனை வீழ்த்திய பிரக்ஞானந்தா, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதுமட்டுமல்லாமல், இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய செஸ் வீரர்கள் தரவரிசையில் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி முதன்முறையாக முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

போட்டியின் நான்காவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தியது தொடர்பாக பேசிய பிரக்ஞானந்தா, “நான் மிக எளிதாக சமன் செய்துவிட்டதாக உணர்ந்தேன், பின்னர் எப்படியோ அவருக்கு விஷயங்கள் தவறாகப் போகத் தொடங்கின. நான் சிப்பாய்களை வீழ்த்திய பிறகும் அது பிடிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். எந்த நாளும், ஒரு வலிமையான வீரரை வென்றால், அது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அவர்களை வெல்வது மிகவும் எளிதானது அல்ல. கிளாசிக்கல் செஸ்ஸில் உலக சாம்பியனுக்கு எதிராக முதல் முறையாக வெற்றி பெறுவது நன்றாக இருக்கிறது” என தெரிவித்தார்.

error: Content is protected !!