எம்.பி. பதவியை மீட்டு மக்களவைக்கு சென்றார் ராகுல் காந்தி!
மோடி சர்ச்சையால் அவதூறு வழக்கில் கிடைத்த ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்ப பெற்று மீண்டும் அவருக்கு எம்.பி பதவியை இன்று வழங்கியுள்ளது. மக்களவை செயலகம் இன்று (ஆகஸ்ட் 7) அறிக்கை மூலம் அதிகாரப்பூர்வமாக இதை தெரிவித்தது.
மோடி பெயர் குறித்தான அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் ஐகோர்ட் கடந்த மார்ச் மாதம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து உடனடியாக அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டி மேல் முறையீடு செய்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் கடந்த வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார். மக்களவை செயலகத்திலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதை அடுத்து இன்று (ஆகஸ்ட் 7) மக்களவை செயலகம் ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை திரும்ப பெற்று அவருக்கு எம்.பி பதவியை மீண்டும் வழங்கியுள்ளது. இதை அடுத்து பெரும் வரவேற்புடன் அவைக்கு வந்தார்.
மக்களவை ஒத்திவைப்புக்கு பின் இன்று மதியம் 12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும் ராகுல் நாடாளுமன்றம் வந்தார். நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் ராகுல் காந்தி அவைக்குத் திரும்பியதால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ‘இந்தியா கூட்டணியைச்’ சேர்ந்த எதிர்க்கட்சிகளும் ராகுல் காந்தியின் வருகையால் உற்சாகமடைந்ததுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் இன்றும் முடங்கியது. இதனிடையே, அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நாளை விவாதம் தொடங்குகிறது. விவாதத்துக்குப் பின் 10-ம் தேதி பிரதமர் மோடி பதிலளிக்கிறார். இந்த விவாதத்திலும் முக்கிய குரலாக ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.