மணிப்பூர் வீடியோ விவகாரம்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

மணிப்பூர் வீடியோ விவகாரம்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!

ணிப்பூர் வீடியோ தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியதுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி, “நேற்று பகிரப்பட்ட வீடியோவால் நாங்கள் மிகவும் தொந்தரவுக்குள்ளாகி உள்ளோம். இந்தச் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம்; நடவடிக்கை எடுங்கள். விரோதத்தை தீர்த்துக்கொள்ள பெண்களை வன்முறையின் கருவியாக பயன்படுத்தப்படுவது அரசியலமைப்பு ஜனநாயகத்தால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் எடுப்போம். இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிந்து அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்” என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தெரிவித்தார். ஆனால் மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரத்தின் ஒரு பகுதியாக, ஒரு இனத்தைச் சேர்ந்த இரு இளம்பெண்களை மற்றொரு சமூகத்தினர் நிர்வாணமாக இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோ வைரலாகி, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த வீடியோவை உடனே அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினா் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினா் நடத்திய போராட்டம் இனக் கலவரமாக மாறி நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்த ராணுவம் அனுப்பப்பட்ட நிலையிலும் கலவரங்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் கலவரக்காரர்கள் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்த வீடியோ வைரலானது. இந்த கொடுஞ்செயலை தடுக்க முயன்ற பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண்ணின் சகோதரரை கலவரக்காரர்கள் கொன்றுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள், நீதிபதிகள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தனர். இதற்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இணையத்தில் பரவி வரும் காணொலியில் காணப்படும் சம்பவம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் நடந்ததாகவும், கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேதி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் இரண்டு மாதங்களுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த பதற்றமான சூழலில், மணிப்பூர் இளம்பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்றது தொடர்பான வீடியோவை உடனே அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவை நீக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சிறிது கால அவகாசம் தருவோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்சநீதிமன்றம்  இவ்விவகாரத்தைக் கையில் எடுக்க நேரிடும். மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்கள் ஆடைகளை களைந்து இழுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த இந்த கொடூரம் ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் மணிப்பூர் வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்  இந்த வழக்கு விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

error: Content is protected !!