கீழடி ஆய்வால் தலை நிமிரும் தமிழர் பெருமையும், இந்தியர் நாகரிகமும்!

கீழடி ஆய்வால் தலை நிமிரும் தமிழர் பெருமையும், இந்தியர் நாகரிகமும்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகுக்கு பல நெறிகளை வகுத்து வழங்கியது நமது தமிழ் மண். ஆனால் அதன் தொன்மை இன்னும் சரிவர ஆராயப்படவில்லை என்பதே தமிழ் அறிஞர்களின் வாதம். ”தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம்தான் ‘உலகின் நாகரிக தொட்டில்’ என்று 1927-ம் ஆண்டில் சிந்து சமவெளி நாகரிகம் பற்றி ஆய்வு செய்த பானர்ஜி என்ற ஆராய்ச்சியாளர் தெரிவித்தார். “தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் அங்கு அப்போதே எக்கு (இரும்பு) பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும்” அவர் கூறினார். இதே போல் தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரங்கள், வைகை ஆற்றுப்படுகையில் உள்ள கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. ஒன்றா, இரண்டா… ஆயிரக்கணக்கான பொருட்கள் அங்கு கிடைத்துள்ளன. அவை ஒவ்வொன்றையும் பார்த்தாலே தமிழர்களின் நாகரிகப் பழமை வெளிப்பட்டுவிடும். நாட்டிலேயே பழங்கால நகர நாகரிகம் இருந்ததற்கான தடயங்களும் கீழடியில்தான் கிடைத்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி கிராமம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு கீழடி யில் விவசாயிகள் தென்னை மரக் கன்றுகளை நடுவதற்காக குழி தோண்டியபோது பழங்கால மண் பாண்ட பொருட்கள் வெளியே தெரியவந்தது. அதுவும் ஆயிரக்கணக்கில் கிடைத்தன. இதனால் அங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் சுணக்கம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு, நீதிமன்ற விசாரணை யெல்லாம் நடைபெற்றது.

இதை அடுத்து மத்திய தொல்லியல் துறை 2014 முதல் 2017 வரையில் கீழடியில் மூன்று கட்டங் களாக அகழாய்வுகளை நடத்தியது. பின்னர் தமிழக அரசின் தொல்லியல் துறை 2017-18, 2018-19 ஆண்டுகளில் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை நடத்தியது. நான்காம் கட்ட அகழாய் வின் போது கிடைத்த 5,820 அரும்பொருட்களின் தேர்ந்தெடுத்த மாதிரிகள் சர்வதேச ஆய்வகங் களுக்கும் தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையிலான முடிவுகள் தொல்லியல் அறிஞர்கள் குழுவால் சரிபார்க்கப்பட்டு ‘கீழடி: வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.

கீழடி அகழாய்வின்போது கி.மு ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட பானைகள் கிடைத்தன. அதேபோல், திமில் உள்ள காளைகள், பசு, எருமை, ஆடு போன்றவைகளை வேளாண் பணிகளுக்கு உதவும் வகையில் கால்நடைகளாக வளர்த்து வந்திருப்பதற்கான ஆதாரங் கள் கிடைத்திருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், களிமண், செங்கல், சுண்ணாம்பு சாந்து மற்றும் இரும்பு ஆணிகள் பயன்படுத்தி வீடுகள் கட்டுமானம் நடைபெற்றதற் கான ஆதாரங்களும் கீழடியில் கிடைத்திருக்கின்றன.

சங்ககால தமிழ்ச் சமூகம் எழுத்தறிவு பெற்ற சமூகம் என்பதற்கு சான்றாக பெயர்கள் பொறிக்கப் பட்ட பானைகள். இருவேறு நிறங்களில் பானைகள், நூல் நூற்கும் தக்கழிகள், கூர்முனை கொண்ட எலும்பால் செய்யப்பட்ட கருவிகள், தங்க அணிகலன்கள், மணிகள், தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, சதுரங்கம் மற்றும் பகடைக் காய்கள் போன்றவையும் கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வு முடிவுகள் வரலாற்றைத் திருத்தி எழுதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்நிலையில் ‘கல் தோன்றி முன் முன் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி’ என்ற பழமொழியை நிரூபித்துக் காட்டியுள்ளது கீழடி அகழாய்வு. கங்கை நகர நாகரிகம் போன்று தமிழகத்தில் இரண்டாம் நகர நாகரிகம் இருந்ததற்கான பல்வேறு சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் ஒரு நாகரிகமாக ‘கீழடி நாகரிகம்’ இருக்கும் என்று கூறுகின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

அதிலும் 4ம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல் துறை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் மூன்று கட்ட அகழாய்வின்படி, கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு பழமையானவை என்று கருதப்பட்டது. ஆனால், 4ம் கட்ட ஆய்வில் இது மேலும் 400 ஆண்டுகளுக்கு பழமையானது என்று தெரிய வந்துள்ளது. சங்க காலம் என்று அழைக்கப் படுவது கி.மு.3ம் நூற்றாண்டு முதல் கி.பி.2ம் நூற்றாண்டு வரை. இந்திய வரலாற்றுக் காலம் என்றாலே அது சங்க காலம் தான் என்று கருதப்படுகிறது. அந்த காலத்தில் செழுமையான வாழ்க்கையை மக்கள் வாழ்ந்துள்ளார். சங்க கால இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுதொகை உள்ளிட்ட நூல்களும் இலக்கியச் செழுமையை பறைசாற்றுகின்றன.

ஆண்பாற் புலவர்கள் மட்டுமின்றி ஒளவையார், காக்கைப்பாடினி நச்செள்ளையார் உள்ளிட்ட பெண்பாற் புலவர்களும் சங்ககால வாழ்க்கை முறையை பாடல்கள் மூலமாக நமக்கு காட்டு கின்றனர். இந்நிலையில், கீழடி அகழாய்வின் மூலமாக கிடைத்துள்ள பொருட்கள் கி.மு.6ம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்று தமிழக தொல்லியல் துறை உறுதி செய்துள்ளது. இதன் மூலமாக சங்க காலத்திற்கும் முந்தைய ஒரு நாகரிகம் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

கீழடி அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள், காதணிகள் உள்ளிட்ட அணிகலன்கள், மணிகள், உலோகங்கள், மண்பாண்டத் தகடுகள், பல்வேறு குறியீடுகள், சதுரக்கட்டைகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. சங்க காலப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு முத்து மணிகள், பெண்கள் உபயோகிக்கும் கொண்டை ஊசிகள், தந்தத்தினால் ஆன சீப்பு உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

சுமார் 1000க்கும் மேற்பட்ட மண்பாண்ட தகடுகள் கிடைத்துள்ளது சங்க காலத்தில் மண்பாண்டம் ஒரு தொழிலாக இருந்ததாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி மண்பாண்டத் தகடுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் பிராமி எழுத்துகளின் காலமும் முன்னோக்கிச் செல்கிறது. மேலும், இந்த எழுத்துகளின் வடிவம் ஒவ்வொரு தகட்டில் வெவ்வேறாக உள்ளது.

எனவே, தமிழர்கள் கி.மு.6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கக்கூடும்; இதன் மூலம் தமிழே உலகின் மூத்த மொழி என்று உறுதி செய்யப்படுவதாக ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.கட்டிட பொருட்களின் ஆய்வில், இரும்பு பொருட்கள், சுட்ட செங்கற்கள், களிமண், கூரை கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று விளையாட்டிற்கு சதுரக் கட்டைகள், 6 பக்கங்கள் கொண்ட தாயக் கட்டைகள், குழந்தைகள் விளையாடுவதற்கான சுடுமண்ணால் ஆன பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. விளையாட்டு மற்றும் கட்டிடக்கலையில் தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளதை இது காட்டுகிறது. அதே நேரத்தில் இங்கு சமயம் சார்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமயங்கள் தோன்றுவதற்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்து உள்ளார்கள் என்றும் இதன் மூலம் யூகிக்க முடிகிறது என்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள்.

மேலும், ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு அவற்றை ஆய்வு செய்து பார்த்ததில் அவைகளில் பெரும்பாலனவை ஆடு, மாடு, எருமை உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகள் என்று தெரிய வந்துள்ளது. ஆடு, மாடுகள் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேபோன்று நூல் நூற்கும் பொருட்கள் பலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் நெசவுத் தொழிலும் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் மட்டுமே அதிகளவிலான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. நீண்ட ஆய்வுகள் நடைபெறும் இடமும் கீழடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சிந்து, கங்கை நாகரிகம் என்பது போல வருங்காலத்தில் ‘வைகை நகர நாகரிகம்’ அல்லது ‘கீழடி நாகரிகம்’ என்றும் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெறலாம். கீழடியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் சங்க காலத்தில் தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்தனர்? தமிழ் மொழி எவ்வளவு பழமையானது? என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் குறித்த ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 6ம் கட்ட அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளன. அடுத்தகட்டமாக கீழடிக்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வு செய்ய இருப்பதாகவும், ஆதிச்சநல்லூரிலும் புதிதாக ஆய்வுகளைத் தொடங்கவிருப்பதாக மாநில தொல்லியல் துறையின் செயலாளர் உதயச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

கங்கை நகர நாகரிகம் போன்று இரண்டாம் நிலை நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் கீழடி ஆய்வுகள், தென் இந்தியாவின் வரலாற்றை, முக்கியமாக தமிழர்களின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறது என்று கூறுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

அகஸ்தீஸ்வரன்

error: Content is protected !!