பெண்களால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் நிலக்கரி நிறுவன மருத்துவமனை திறப்பு!
பிலாஸ்பூர், ஜூலை 14, 2025: பெண்களின் அதிகாரமளித்தலை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பெண்களால் மட்டுமே நடத்தப்படும் வசந்த் விஹார் மருத்துவமனை, பிலாஸ்பூரில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் (SECL) இன்று துவங்கப்பட்டுள்ளது. இது இந்திய நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Limited) முதல் பிரத்யேக பெண் ஊழியர்கள் மருத்துவமனை என்ற பெருமையைப் பெறுகிறது.
இந்த மருத்துவமனையை, தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு. ஹரீஷ் துஹான் திறந்துவைத்தார். நிலக்கரித் துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இந்த மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவிப்பணியாளர்கள் என மொத்தம் 16 பெண்களைக் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு. ஹரீஷ் துஹான், இந்த நடவடிக்கை நிலக்கரித் துறை அமைச்சர் திரு. கிஷன் ரெட்டியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். எதிர்காலத்தில் பெண்களுக்கு தலைமைத்துவ வாய்ப்புகளை உருவாக்கவும், நிலக்கரித் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
வசந்த் விஹார் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD), அவசர மருத்துவ சேவைகள் பிரிவு (Emergency Services) உட்பட பல்வேறு வகையான மருத்துவ சேவைகள் அளிப்பதற்கான நவீன வசதிகள் உள்ளன. இந்த முன்முயற்சி நிலக்கரித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறப்பதோடு, மற்ற துறைகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


