சாப்பாட்டுச் சந்தையில் சரித்திரம்: இந்தியாவின் F&B துறையைக் குறிவைக்கும் தனியார் முதலீடுகள்!
இந்தியாவின் உணவு மற்றும் பானங்கள் (F&B) துறை தற்போது உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதுடன், 2026-ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் சுமார் 535 பில்லியன் டாலர் மதிப்பிலான வளர்ச்சியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாறிவரும் நுகர்வோர் கலாச்சாரம், நகரமயமாக்கல் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு காரணமாக இயற்கை உணவுகள் (Organic) மற்றும் சர்க்கரை குறைவான பானங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் 2026-27 மத்திய பட்ஜெட்டில் கடல்சார் உணவு பதப்படுத்துதல் மற்றும் உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் (Ultra-processed foods) விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கவும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘குயிக்-காமர்ஸ்’ (Quick Commerce) எனப்படும் விரைவு விநியோகச் சேவைகள் மூலம் மளிகைப் பொருட்கள் வாங்கும் முறை நகர்ப்புறங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதால், இத்துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நம் நாட்டில் இத்துறை இன்று ஒரு பொற்காலத்தைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, மில்லினியல்கள் மற்றும் ஜென்-ஜி (Gen Z) தலைமுறையினரின் நுகர்வு கலாச்சாரம் மாறியுள்ளதால், பெரிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய உணவு பிராண்டுகளில் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டத் தொடங்கியுள்ளன.

முதலீட்டு மழையில் நனையும் ஜாம்பவான்கள்
2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடந்த சில முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் இத்துறையின் வளர்ச்சியைப் பறைசாற்றுகின்றன:
-
ஹல்திராம் ஸ்நாக்ஸ் (Haldiram Snacks): டெமாசெக் (Temasek), ஐஎச்சி (IHC) மற்றும் ஆல்பா வேவ் குளோபல் ஆகிய நிறுவனங்கள் இதில் சிறுபான்மை பங்குகளைக் கைப்பற்றியுள்ளன.
-
தியோப்ரோமா (Theobroma): பிரபல பேக்கரி நிறுவனமான தியோப்ரோமாவின் கட்டுப்பாட்டுப் பங்குகளை ‘கிரைஸ்கேபிட்டல்’ (ChrysCapital) வாங்கியுள்ளது.
-
தேவயானி இன்டர்நேஷனல்: இந்த ஆண்டு ‘ஸ்கை கேட் ஹாஸ்பிடாலிட்டி’ (Sky Gate Hospitality) நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைத் தனது வசமாக்கியுள்ளது.
விசேஷமல்ல… இனி இது ஒரு வசதி!
இந்தியாவைப் பொறுத்தவரை வெளியே சாப்பிடுவது என்பது ஒரு விசேஷ நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியர்கள் சராசரியாக மாதம் 5 முறை வெளியே சாப்பிடுகிறார்கள். இது 2030-ல் 7 முதல் 8 முறையாக அதிகரிக்கும்.
-
அமெரிக்கா மற்றும் சீனாவில் மக்கள் மாதம் 25 முதல் 30 முறை வெளியே சாப்பிடுகிறார்கள். அங்கு இது ஒரு ‘வசதிக்காகச்’ (Convenience) செய்யப்படும் விஷயம்.
-
இந்தியாவிலும் மெல்ல மெல்ல இந்த கலாச்சாரம் பரவி வருகிறது. இனி விசேஷங்களுக்கு மட்டுமின்றி, வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக வெளியே சாப்பிடுவது அல்லது ஆர்டர் செய்வது ஒரு வழக்கமான விஷயமாக மாறும்.

ஆன்லைன் டெலிவரியின் அசுர வளர்ச்சி
2019 முதல் 2023 வரை ஆன்லைன் உணவு டெலிவரி 8 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒட்டுமொத்த உணவுச் சந்தையை விட 2.8 மடங்கு வேகமான வளர்ச்சியாகும்.
-
அடுத்த 7 ஆண்டுகளில் ஆன்லைன் டெலிவரி ஆண்டுக்கு 18% வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதன் சந்தை மதிப்பு சுமார் 2.12 லட்சம் கோடி ரூபாயைத் தொடும்.
-
ஆன்லைன் பயன்பாடு தற்போதுள்ள 12 சதவீதத்திலிருந்து 2030-ல் 20 சதவீதமாக உயரும்.
விளையாட்டை மாற்றிய ‘குயிக் காமர்ஸ்’ (Quick Commerce)
“முன்பெல்லாம் ஒரு உணவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் கடினமான காரியம். ஆனால் இப்போது ‘குயிக் காமர்ஸ்’ (Zomato, Swiggy, Blinkit போன்றவை) அந்தத் தடையை உடைத்துவிட்டது” என்கிறார் வெர்லின்வெஸ்ட் (Verlinvest) நிறுவனத்தின் ஆசியப் பிரிவுத் தலைவர் அர்ஜுன் ஆனந்த்.
இதன் மூலம் ஒரு பிராண்டை அறிமுகப்படுத்தி, சோதனை செய்து, சில மாதங்களிலேயே நாடு முழுவதும் கொண்டு செல்வது சாத்தியமாகியுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்த வேகம், முதலீட்டாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
மாறும் நுகர்வோர் மனநிலை
இன்றைய இளைஞர்கள் வெறும் சுவையை மட்டும் பார்ப்பதில்லை:
-
விழிப்புணர்வு: உணவில் என்னென்ன உட்பொருட்கள் (Ingredients) சேர்க்கப்பட்டுள்ளன என்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள்.
-
பிரீமியம் தரம்: தரமான மற்றும் பிரத்யேகமான உணவுகளுக்காகக் கூடுதல் விலை கொடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை.
-
டிஜிட்டல் மயம்: ஆன்லைனில் ஆர்டர் செய்வது இவர்களுக்கு இயல்பான ஒரு விஷயமாகிவிட்டது.
முதலீட்டாளர்களின் இலக்கு என்ன?
சி.கே. இஸ்ரானி குழுமத்தின் சாந்தினி நாத் இஸ்ரானி இது குறித்துக் கூறுகையில், “உணவுத் துறையின் சராசரி வளர்ச்சியை விட 1.5 முதல் 2 மடங்கு வேகமாக வளரக்கூடிய பிராண்டுகளைக் கண்டறிந்து முதலீடு செய்வதே எங்கள் நோக்கம்” என்கிறார். உள்நாட்டு பிராண்டுகள் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக் கொள்வது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.


