இப்படியான விபத்துகளில் அரசுகள் பாடம் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை கடந்து விட்டன!
கிட்டத்தட்ட ஐம்பது சதவீத ஊழல். ஊழியர் பற்றாக்குறை, நிர்வாகக் குளறுபடிகளால் பராமரிப்பின்மை இவற்றால் எளிய மக்களின் பொதுப் போக்குவரத்து பெரும் நம்பிக்கை இழப்பிற்கு உள்ளாகி இருக்கிறது இந்த விபத்தின் மூலம்.
ரயில் பயணம் -அன்றாடக் கூலி வேலைகளுக்காக வடக்கிலிருந்து தென் மாநிலங்களை நோக்கி வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தென் மாநிலங்கள் கல்வி வசதி பெற்றுள்ளதால் உதிரி உடல் உழைப்பிற்குப் போதிய ஆட்கள் கிடைப்பது கடினம் என்ற நிலை இருப்பது ஒரு பகுதி உண்மையே. ஆனாலும் அடித்தட்டு உழைப்பாளிகள் குடி நோயாளிகளாகி விட்டிருப்பதும் இதில் முக்கியமான பங்களிப்பாக இருக்கிறது. வடக்கு – தெற்கு உழைப்பாளிகளுக்கு முழு முதற் போக்குவரத்து ஊடகமே ரயில் தான். ஆலப்புழாவில் இருந்து விஜயவாடா வழியாக ஒடிசா செல்லும் ரயிலில் முன்பதிவு செய்தே பலமுறை பயணித்துள்ளேன்.
ஒரு முறையும் எனது படுக்கை சீட்டில் உட்கார்ந்து செல்லக் கூட வாய்த்ததில்லை. ‘நம்ப சாதி தானே’ என்று முன்பதிவு செய்த நானும் ஒண்டிக் கொண்டே போய் இருக்கிறேன். அவ்வளவு நெருக்கியடித்து 15 இல் இருந்து 30 வயதிற்குட்பட்ட உழைப்பாளர்களே கழிவறை உள்ளேயும் ஒருவர் மீது ஒருவராகப் பிணைந்து வருவார்கள். பலர் நினைப்பது போல டிக்கெட்ட் இல்லாப் பயணமல்ல அது. போக, முன் பதிவுப் பெட்டியில் ஏறியதற்காக நபர் ஒன்றுக்கு ரூபாய் 500 அபராதமும் ரசீது கொடுத்து வசூலிக்கிறது ரயில்வே.
100 பேர் படுக்கை வசதி உள்ள பெட்டியில் குறைந்தது 500 பேராவது பயணிப்பார்கள். விபத்துற்ற ரயிலில் எஞ்சினுக்கு அடுத்தடுத்தாக இருந்தவை பொதுப் பெட்டிகளே. விபத்து நடந்தால் அதிலும் குரலற்ற அடித்தட்டினரே கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகட்டும் என்ற திட்டமிட்ட நோக்கமும் இருக்கக்கூடும். இந்தப் பின்ணணியில் பார்த்தால் விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 1000 ஐ தாண்டக்கூடும் என்பது வெற்று யூகமல்ல என்பதும் புரியும்.
மக்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டியது அரசின் பொறுப்பு என்ற தார்மீகக் கடமைகளை வளரும் நாடுகள் கை விட்டுக் கால் நூற்றாண்டு ஆகி விட்டது. மக்களுக்கான போக்குவரத்தினை நடத்துவது அரசின் வேலையல்ல என்று கூவுவதற்குப் பல நவீன பொருளாதார மேதைகள் உண்டு. அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி அருகிலான கிராமத்துப் பெண்மணி, முதல் நாள் மாலையில் பறித்த கீரையை அதிகாலை 4 மணிக்குப் பத்து ரூபாய் டிக்கட்டில் ரயிலில் ஏற்றி செங்கல்பட்டுத் தெருவில் விற்று, அதே பத்து ரூபாய் டிக்கெட்டில் மீண்டும் கும்மிடிப்பூண்டி சென்றடைந்து பிள்ளைகளுக்கு உலை வைக்கும் குடும்பப் பொருளாதாரம் பற்றி ஒருபோதும் தெரியப் போவதில்லை. இப்படிப்பட்ட ரயில் விபத்துகளால் பொதுத்துறை நிறுவனங்களை விற்று ஊதாரித்தனமாக இயங்கும் சங்கித்தனத்திற்கு ஆதரவாகத் தங்களது தர்க்கங்களைக் கூர் தீட்டுவார்கள் தாராளப் பொருளாதார வாதிகள்.
இந்த விபத்து என்பது வெறும் விபத்து, 1000 உயிர்கள் என்பது மட்டுமேயல்ல. அடித்தட்டு மக்கள் மீதான அலட்சிய பாவத்தின் வெளிப்பாடே ஆகும். இதே ஊழியர் பற்றாக்குறை உடலை நோய்க்குள்ளாக்கும் கடுமையான வேலைப்பளு, ஊழல் மிகுந்த நிர்வாகச் சீர்கேடு, பராமரிப்பின்மை தமிழக அரசின் போக்குவரத்துத் துறையிலும் உண்டு. இப்படியான விபத்துகளில் அரசுகள் பாடம் கற்றுக்கொள்ளும் பக்குவத்தை என்றோ கடந்து விட்டன. ஏனென்றால் மக்களுக்கான அரசுகள் அல்ல. அதானிகள் – அதானிகள் போன்றோர்க்கானவை அவை.