தவறான விளம்பர விவகாரம்: பாபா ராம்தேவுக்கு சுப்ரீம் கோர்ட் சம்மன்!

தவறான விளம்பர விவகாரம்:  பாபா ராம்தேவுக்கு  சுப்ரீம் கோர்ட் சம்மன்!

தஞ்சலி ஆயுர்வேத் என்ற பெயரில் யோகா குரு ராம்தேவால் நிறுவப்பட்ட நிறுவனனானது சுப்ரீம் கோர்ட் அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்காத நிலையில் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நார்த் இண்டியாவின் சர்ச்சை சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன பொருட்கள், தீராத நோய்களை குணப்படுவத்துவதாகவும், அலோபதி மருத்துவ முறைக்கு எதிராகவும் விதிகளை மீறி விளம்பரப்படுத்துவதாகக் கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தவறான விளம்பரங்களை வெளியிட தடைவிதித்த சுப்ரீம் கோர்ட் , மீறினால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தது. அதை அடுத்து இதுபோன்ற விளம்பரங்களை ஒளிபரப்ப மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததையும் மீறி, பதஞ்சலி மீண்டும் விளம்பரம் செய்தது. அதாவது தடுப்பூசி மற்றும் சமகால மருத்துவ நடைமுறைகளுக்கு எதிராக பாபா ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது எனக்கேட்டு, 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டும், ஏன் பதஞ்சலி பதிலளிக்கவில்லை என நீதிபதிகள் கடுமையாக கேள்வியெழுப்பினர். நீதிமன்றத்துக்கு அளித்த உறுதிமொழியினை மீறி விளம்பரத்தை வெளியிட்டது தொடர்பாக பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து “பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணா மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் தவறான விளம்பரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறினால் அவமதிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை கொடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் பதில் கொடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற நோட்டீசுக்கு பதிலளிக்காத ஆச்சார்யா பால்கிருஷ்ணாவும் பாபா ராம்தேவும் அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டனர்.