பாஜகவின் “விக்சித் பாரத்” வாட்ஸ்அப் விளம்பரத்தை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!

பாஜகவின் “விக்சித் பாரத்” வாட்ஸ்அப் விளம்பரத்தை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு!

மோடி தலைமையிலான பாஜக அரசு சார்பில் விக்சித் பாரத் திட்டத்தின் கீழ், பல்வேறு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வாட்ஸ்-அப் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. இதனை உடனடியாக நிறுத்த தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த பாரதம் என பொருள்படும் விக்சித் பாரத் திட்டம் குறித்து மக்களுக்கு ஒன்றிய அரசின் ஐ.டி. அமைச்சகம் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டான 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான பொருளாதார, சமூக முன்னேற்றம், நல்ல நிர்வாகம் உள்ளிட்ட பல முயற்சிகளை முன்னெடுப்பதே ‘விக்சித் பாரத் 2047’ திட்டத்தின் நோக்கம். இதனை பிரதமர் மோடி 2023 நவ.15 அன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த திட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி விளம்பரம் செய்து வருகிறது. ஆனால் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின் பாஜக அரசின் திட்டம் குறித்து மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது தேர்தல் விதிமீறல் என எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. அரசின் நிதியை பயன்படுத்தி பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவதாக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக வாட்ஸ்அப் மூலம் அனுப்பும் “விக்சித் பாரத்” தொடர்பான தகவலை நிறுத்துமாறு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.விளம்பர நோக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துவதுடன் இது தொடர்பாக ஒன்றிய அரசு அறிக்கை அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!