சத்துணவு முட்டை மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ஊழல்! விசாரணை ஆரம்பம்!

சத்துணவு முட்டை மூலம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ஊழல்! விசாரணை ஆரம்பம்!

நம் தமிழகத்தை கடந்த இருபது வருஷங்களுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின்மீது எழுந்திருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள், கைதுகள், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவை இன்று வரை இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலத்தில் முதலிடத்தில் தான் இருக்கிறது. அதை இன்னும் பலப்படுத்துவது போல் வருடத்துக்கு 250 கோடி சத்துணவு முட்டை ஊழல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதாவது  இங்குள்ள ஏழை, எளிய குழந்தைகள் சாப்பிடும் சத்துணவு முட்டை வாங்கியதில் தமிழக அரசு, ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பியிருப்பதோடு இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லியிலுள்ள காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (Competition Commission of India) அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து டெல்லியிலுள்ள ஆணையத்தில் முறையீடு செய்த சந்திரனின் வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் சொன்ன தகவல் இதோ:“என்.இ.சி.சி. (National Egg Coordination Committee) எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுதான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் முட்டைகளின் விலையை நிர்ணயிக்கிறது.

சட்டப்படி நிர்ணயிப்பதற்கான அங்கீகாரமோ அனுமதியோ இந்த தனியார் அமைப்புக்கு கிடையாது என்றாலும் பெரு முட்டை உற்பத்தியாளர்கள் உறுப்பினர் களாக இருந்து கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள்.  தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 3 ¼ கோடி முட்டை தயார் ஆகிறது. இதில், 90 சதவீதம் நாமக்கல்லில் உற்பத்தி ஆகிறது. இதில், சத்துணவுக்கூடங்களுக்கு ஒருநாளைக்கு 70 லட்சம் முட்டைகளை வாங்குகிறது தமிழக அரசு. வாரத்தில் ஐந்து நாட்கள் வாங்குகின்றன. ஆனால், சத்துணவுக்கூடங்களுக்கு வாங்கும் முட்டைகளின் அளவு 46 கிராம் இருந்தால் போதும் என்கிறது தமிழக அரசு. சராசரியாக 50 லிருந்து 55 கிராம் அளவு முட்டைதான் சந்தை களுக்கு விற்பனைக்கு வந்தாலும் 46 கிராம் அளவுகொண்ட சிறு முட்டைகளைத்தான் தமிழக அரசு சத்துணவுக் கூடங்களுக்கு கொள்முதல் செய்கிறது. இதில்தான், ஊழல் ஆரம்பிக்கிறது.

சராசரி முட்டையில் அளவைவிட குறைவாக உள்ள முட்டைகளின் விலையை குறைத்து விற்கலாம் என்றும் விலை நிர்ணயம் செய்திருக்கிறது என்.இ.சி.சி. அப்படியிருக்க, குறைந்த அளவு(46 கிராம்) கொண்ட முட்டைகளை விலை குறைத்து வாங்காமல் அதே பெரிய அளவுகொண்ட முட்டை விலைக்கே வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும்,  தமிழ்நாட்டிற்கு முட்டை விலை நிர்ணயிக் ககூடிய மையம் நாமக்கல்தான். 2013 லிருந்து வருடாந்திர டெண்டர் மூலம் வாங்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஜூன் மாதத்தில் டெண்டர் விடுகிறது தமிழக அரசு.  மற்ற மாதங்களைவிட ஒவ்வொரு வருடத்தின் ஜூன் மாதத்திலும் முட்டை விலையை கூடுதலாக என்.இ.சி.சி. நிர்ணயத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதை, வைத்து கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் கூடுதலாக கொடுத்து சிறிய சைஸ் முட்டைகளை வாங்கி தமிழக அரசு ஊழல் செய்திருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து, ஆணையத்திடம் முறையிட்டபோது குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது ஆணையம்” என்கிறார் அவர். ஜெயலலிதா  ஆட்சியில் 2013 ஆண்டில் இருந்தே ஏழை எளிய குழந்தைகள் சத்துணவில்கூட தமிழக அரசின் சமூக நலத்துறை அதிகாரிகளும் அமைச்சரும் இதன் மூலம் ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பது  வெளியே வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது ..

error: Content is protected !!