இந்திய கல்வி எதை நோக்கி போகிறது? – குழம்பும் பேராசிரியர்

இந்திய கல்வி எதை நோக்கி போகிறது? – குழம்பும் பேராசிரியர்

கடந்த டிசம்பர் 28ம் தேதி, சென்னையில் உள்ள IIT, MADRAS-ல் ‘இண்டியன் காங்கிரீட் இன்ஸ்டி டியூட் (ICI)‘ நடத்திய ஒரு நாள் கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். Structural Design of Building Systems என்ற தலைப்பில் இது நடைபெற்று இருந்தாலும்… இந்த பதிவு கட்டுமானம், கட்டிட வடிவமைப்பு போன்ற துறை சார்ந்த விஷயங்கள் குறித்தல்ல.

இந்த நிகழ்ச்சியில் ஐஐடியின் சிவில் என்ஜினியரிங் துறை பேராசிரியர்கள் இருவர் பேசினர். இதில் இறுதியாக இடம்பெற்ற பேரா. சி.வி.ஆர். மூர்த்தி அவர்களது பேச்சுதான் ஹைலைட். அவருக்கு தரப்பட்ட தலைப்பு என்னவோ ‘Challenges in Structural Design’ என்பதுதான். ஆனால், அவரது பேச்சின் அர்த்தம் புரிந்தவர்கள் அதை Challeges before India என்றோ…. Challenges to our future generations என்றோ குறிப்பிட்டால் தவறில்லை. நான் அப்படித்தான் புரிந்து கொண்டேன். அப்படித்தான் குறிப்பிடுவேன்.

அதனால்தான் இதை பொதுத்தளத்தில் எழுது முன்வந்தேன்.

அவரது பேச்சின் மொத்த உள்ளடக்கத்தை ஆரம்பத்திலேயே 3 வெவ்வேறு தலைப்புகளில் பகுத்தி ருப்பாக சொன்னார். 1. கல்வி (Education), 2. செயல்முறை பயிற்சி (Practice), 3. வழிகாட்டும் கட்டமைப்பு (Regulatory Frame work). இவைதான் அவரது பட்டியல்.

கல்வி என்ற தலைப்பில் பேசியபோது அவரது கருத்துகள் பலவும் தற்போதைய பொறியியல் கல்வி நிறுவனங்களை மனதில் வைத்து சொல்லப்பட்டதாக இருக்கும் என நாம் நினைத்துக் கொண்டாலும், அது இன்றுள்ள நிலையில் பொதுவாக அனைத்து கல்வி நிலையங்களுக்கும் – ஆரம்பக் கல்வி முதல் கல்லூரியில் உயர்கல்வி வரை அனைத்துக்கும் பொறுந்தும். “இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களை ஈர்ப்பவர்களாக இல்லை என்பது முதல் கருத்து. அவர்களது செயலால்… உரையால்…. நடைமுறையால்… மாணவர்களை ஈர்க்க வேண்டும். சோதனைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். பணம் சம்பாதிக்க இதுவும் ஒருவேலை என்ற நோக்கில் இருப்பவர்களால், மாணவர்களை ஈர்க்க முடியவில்லை” என்றார்.

“கல்லூரி ஆசிரியர்கள் இன்னும் பழையப் புத்தகங்களையே படிக்கக் கூடாது. அந்நாளைய நடைமுறைகளுக்கு உருவானப் புத்தகங்கள் இன்றைய தேவைகளுக்கு ஈடு கொடுப்பதில்லை” என்று சொன்ன அவர், “அதனால், நான் அடிப்படைகள் மாறிவிட்டன என்று சொல்லவில்லை. நியூட்டனின் விதிகள் மாறிவிட்டதா என்று கேட்கக் கூடாது. அது மாறவில்லை. அதில் மாற்றம் இல்லை. ஆனால், அதை அவர் படித்த காலத்தில் எப்படி சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதே போல சொல்லிக் கொடுக்க முயற்சிக்க கூடாது என்று சொல்கிறேன்” என்று விளக்கமும் சொன்னார். இன்று இணையம் உள்ளிட்ட இன்னும் எத்தனையோ தகவல் தொடர்பு சாதனங்கள், வழிமுறைகள் மல்டி மீடியா வசதிகள் வந்துவிட்டன. அவற்றை எல்லாம் பயன்படுத்திப் பாடம் நடத்த… மாணவர்களை எளிதாக தொட்டுவிட வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. எனவே, அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு.

அதோடு, பள்ளிகள் தொடங்கி… கல்லூரிகள் வரை… பல இடங்களில் இன்னும் வலுவான ஆய்வுக் கூடங்கள் இல்லை. அவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய அரசின் CSIR -ன் கீழ் வரும் சென்னையில் உள்ள SERC அதாவது, Structural Engineering Research Centre-யிலேயே மிகப் பெரிய ஆய்வுகளை மேற்கோள்ளும் வசதிகள் இல்லையே என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். புதிய பாடத்திட்டங்களைத் தேர்ந்தெடுத்து கற்க வசதிகளைச் செய்துதர வேண்டும். அதற்கு வழிகாட்ட ஆசிரியர்களும் தங்களைத் தயார் செய்து கொண்டு முன்வர வேண்டும். மொத்தத்தில் ஆசிரியர்களின் Attitude… Skill… Knowledge உள்ளிட்ட மூன்றிலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றார்.

பொறியியல் பாடமோ… மற்ற தொழில் கல்வியோ… எதுவானாலும், அதை அன்றாட வாழ்வின் தேவைகளுக்கு பயன்படுத்தும் நடைமுறை… அல்லது செயல்முறை பயிற்சி (Practice)-லும் நாம்… அதாவது இந்தியா பின் தங்கியே இருப்பதாக குற்றம் சாட்டினார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் பல துறைகளில் ஏற்படாத மாற்றம்…. தொழில்நுட்பக் கல்வி மற்றும் நடைமுறை யிலும் தொடர்கிறது. உதாரணமாக, கட்டுமானப் பணிகளில் கடைபிடிக்க வேண்டிய செயல்முறை கள் குறித்த வழிகாட்டு ஆவணம் (Standard codes of Practice) பல ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இன்றி இன்னும் பழைய கதையையே பேசிக் கொண்டிருக்கிறது. சில துறைகளில் அத்தகைய வழிகாட்டு ஆவணமே உருவாக்கப்படவில்லை. ஆனாலும், அவை ஏன் குறித்த கால இடை வெளியில் மேம்படுத்தப்படவில்லை என்றோ…. இதுவரை இல்லாத பிரிவுகளில் அவை ஏன் இன்னும் உருவாக்கப்படவில்லை என்றோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

குறிப்பாக, கட்டுமான நிறுவனங்களோ… பிற நிறுவனங்களோ…. எப்படி இத்தனை நாளும் காலத்தை ஒட்டுகிறார்கள்…. எதைக் கடைபிடிக்கிறார்கள் என்றால்….. மிக எளிதான பதில் “அமெரிக்க… ஐரோப்பிய..  ஜப்பானிய… வழிகாட்டு ஆவணம் என்கிறார்கள். மொத்தத்தில் இந்தியாவில் நம் நாட்டுக்கான வழிமுறையை இன்னும் உருவாக்காத இடங்களில் தற்காலிகமாக மற்ற நாடுகளின் ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டது சாதகமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது. அதனால், நமது நாட்டுக்கான… நமது சூழலை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டு ஆவணத்தை உருவாக்க…. ஏற்கனவே உள்ளதை கால நேர சூழல் மாற்றத்துக்கு ஏற்ப மேம்படுத்த தொடர்ந்து தவறிக் கொண்டிருக்கிறோம். சாதாரண காங்கிரீட் தள வீடுகளில் இருந்த நமது வாழ்க்கை மெல்ல அடுக்கு மாடி வீடுகளுக்கு மாறி…. அவை இப்போது எந்த திசையில் திரும்பினாலும் உயர் கோபுர பல்லடுக்கு மாடி வீடுகளாக மாறிவிட்டன.

இந்த நிலையில் நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன….. எவ்வளவு பாதிப்பு…. எவ்வளவு இழப்பு…. ஒரு முறை புஜ் நிலநடுக்க பாதிப்பு தந்த பாடம் போதுமானதாக இல்லையா…. ஆனால், அதைப் பற்றியெல்லாம் தீவிரமாக யோசிக்கவோ… மாற்றங்களைக் கொண்டுவரவோ…. முயற்சி நடக்கவில்லை. அப்படி மாற்றங்கள் கொண்டு வர வேண்டியவர்கள் அதை ஏன் செய்யவில்லை…. எப்போது செய்யப் போகிறீர்கள் என்று கேட்க ஆளில்லை.

பல பொறியியல் துறை தொடர்பான செயல்முறை வழிகாட்டு ஆவணங்கள் உருவாக்கப்படா மலும், மேம்படுத்தப்படாமலும் பல ஆண்டுகளாக தொடர்கின்றன. வெளிநாட்டு ஆவணங்களைப் பயன்படுத்துவது தற்காலிகத் தீர்வாக இருக்கலாம். அது நிரந்தமானதாக இருக்க முடியாது; கூடாது. காரணம் – அந்த ஆவணங்களை உருவாக்க அவர்கள் கையாண்ட அணுகுமுறைகளுக்கும், இந்தியாவில் நாம் கையாளும் அணுகுமுறைகளுக்கும் ஏராளமான வேறுபாடு உண்டு. எனவே, அதில் இருந்து கொஞ்சம்…. மீதி நமது ஆவணங்கள் என்றோ….. இதன் தலைகீழ் நடைமுறையோ…. எதுவானாலும்….. பிரச்னைதான். (‘பிட்சாவுக்கு சாம்பார் தொட்டு சாப்பிடுவது போல’ என்று அவர் சொல்லவில்லை. ஆனால், நான் அப்படி என உணர்கிறேன்).

மறுபுறம், இந்தியாவில் உள்ள கட்டிடங்களின் நிலையும் மெல்ல மெல்ல பாழாகி கொண்டுள்ளன. கடந்த காலங்களில் கட்டிய ஏராளமான கட்டுமானங்களுக்கு இன்று சீரமைப்பு தேவைப்படுகிறது. Retrofitting எனப்படும் வலு ஊட்டும் நடவடிக்கைகள் பல கட்டிடங்களுக்கு தேவைப்படுகின்றன. இதுவே வரும் நாட்களில் மிகப் பெரிய வேலையாக… வேலை வாய்ப்பாக உருவெடுக்கும் அளவு சூழல் உள்ளது. எனவே, அவற்றுக்கெல்லாம் சேர்த்து வழிகாட்டி நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், இன்று சில துறைகளில் நீண்ட காலம் பணியாற்றுவதாகச் சொல்லிக் கொள்ளும் ஆட்களும் கூட, இது குறித்து பேசவோ… இந்த பணியில் ஈடுபடவோ முன் வருவதில்லை.

உதாரணமாக, நிலநடுக்க பாதிப்புகள் நெடுஞ்சாலை பாலங்களை எப்படி பாதிக்கும்… அணை கட்டும் போது, நிலநடுக்கம் தொடர்பானவற்றில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன… இனி இவற்றை எப்படி வடிவமைப்பது… மாறிய சூழலில் தற்போதும், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள் என்ன… இது போன்றவற்றில் ஆர்வம் காட்டும் நபர்களை தேட வேண்டியுள்ளது.

சந்திரன் R

Related Posts

error: Content is protected !!